Sunday, September 29, 2024
Home » கொடநாடு கொலை, கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை நிச்சயமாக கண்டுபிடித்து தண்டனை வழங்குவோம்: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

கொடநாடு கொலை, கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை நிச்சயமாக கண்டுபிடித்து தண்டனை வழங்குவோம்: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

by Karthik Yash

சென்னை: சட்டப்பேரவையில் நேற்று காவல் மற்றும் தீயணைப்பு துறை ஆகிய மானிய கோரிக்கை மீதான விவாதம் வருமாறு: எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி: கொடநாடு வழக்கில் குற்றவாளிகளை கைது செய்து சிறையில் அடைத்தது அதிமுக அரசு. ஜாமீனில் எடுத்தது திமுக காரர். கொடநாடு வழக்கில் சிபிஐ விசாரணை நடந்தால்தான் உண்மை தெரியும். அதற்கான மனு அளிக்க உள்ளோம்.
முதல்வர் மு.க.ஸ்டாலின்: கொடநாடு சம்பவம் நடந்து 4 வருடம் நீங்கள்தான் முதல்வராக இருந்தீர்கள். என்ன நடவடிக்கை எடுத்தீர்கள். திமுக ஆட்சி வந்த பிறகுதான் விரைவுபடுத்தி உள்ளோம். நிச்சயமாக, உறுதியாக குற்றவாளிகளை கண்டுபிடித்து தண்டனை வழங்குவோம்.
எடப்பாடி: நீதிமன்றம்தான் தண்டனை வழங்கும். முதல்வர் தண்டனை வழங்க முடியாது. கொரோனா காரணமாக விசாரணை அறிக்கை விரைவாக தாக்கல் செய்ய முடியவில்லை.
சட்ட அமைச்சர் ரகுபதி: குற்றவாளிகள் தப்ப முடியாதபடி குற்றப்பத்திரிகை விரைவில் தாக்கல் செய்யப்படும்.
பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு: அதிமுக எம்எல்ஏக்களுக்கே அதிமுக ஆட்சியில் பாதுகாப்பு இல்லை. ராணிப்பேட்டை எம்எல்ஏ வெட்டப்பட்டார். மேலும் 3 எம்எல்ஏக்கள் தாக்கப்பட்டனர். அனைவரும் அதிமுக உறுப்பினர்கள்தான்.
எடப்பாடி: கொடநாடு வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது.
முதல்வர் மு.க.ஸ்டாலின்: நாங்கள் தீர்ப்புக்குள்ளே போகவில்லை. அந்த வழக்கின் விசாரணைக்குள்ளேகூட போகவில்லை. இந்த வழக்கின் குற்றவாளி சயான் சிறையில் இருந்து விடுதலையான 29-7-2021 அன்று காலை சிறை அதிகாரிகளிடம் கடந்த அதிமுக ஆட்சியில் தனது உயிருக்கு ஆபத்து இருந்தது என்பது குறித்து பேசியிருக்கிறார். தற்போது இந்த வழக்கில் சில உண்மை நிலவரத்தை தெரிவிக்க உள்ளதாகவும் கூறி அளித்த மனு உதகமண்டலத்தில் உள்ள மாவட்ட அமர்வு நீதிமன்றத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, வழக்கில் மேல் புலன் விசாரணை நடத்த அனுமதி கோரி அரசு தரப்பிலும் மனு தாக்கல் செய்யப்பட்டதையடுத்து அனுமதி வழங்கப்பட்டது. இதனையடுத்து காவல் துறையினர் எதிரி சயானை விசாரணை செய்தனர். மேல் விசாரணைக்கு எதிராக அம்மா பேரவை மாவட்ட துணை அமைப்பாளர் அனுபவ் ரவி தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து இந்த வழக்கை புலன் விசாரணைக்கு எடுத்துக் கொண்ட தனிப்படை, குற்றவாளிகளுக்கு அடைக்கலம் கொடுத்ததற்காகவும், சாட்சியங்களை மறைத்த காரணத்திற்காகவும் இறந்துபோன கனகராஜின் சகோதரர் தனபால் மற்றும் ரமேஷ் ஆகியோரை 25-10-2021 அன்று கைது செய்தனர். தனிப்படையினர் 306 பேரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இந்நிலையில், இந்த வழக்கு 19-10-2022 அன்று மாநில குற்றப்பிரிவு குற்றப் புலனாய்வு துறைக்கு மாற்றப்பட்டு அவர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சம்பவம் நடந்தது ஏப்ரல் 24, 2017; 6 ஆண்டுகள் ஆகிவிட்டன. அந்த சம்பவம் நடந்ததும் உடனடியாக ஆதாரங்களை சேகரித்து வைத்திருந்தால், விரைந்து வழக்கை முடித்திருக்க முடியும். ஆண்டுகள் பல ஓடிய காரணத்தால், சில விஷயங்களை முழுமையாக வெளிக்கொண்டு வர தாமதம் ஏற்படுகின்றது. ஆனாலும், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வீட்டில் நடந்த விவகாரம் இது என்கிற காரணத்தால், அவர் சாதாரண நபர் அல்ல; முதலமைச்சராக இருந்தவர். ஆக, அவர் இருந்த அந்த எனவே, இந்த விவகாரத்தை பொறுத்தவரையில், மிகுந்த கவனத்தோடு விசாரணை நடத்தி, உண்மை குற்றவாளியை நிச்சயமாக விரைவில் கண்டுபிடிப்போம்.
எடப்பாடி: அந்த வீட்டில் ஜெயலலிதா வசித்தது உண்மை. ஆனால் அந்த வீடு அவருடையது இல்லை.
முதல்வர் மு.க.ஸ்டாலின்: ஜெயலலிதா இருந்த பங்களா, அவர் ஓய்வு எடுத்த பங்களா.
எடப்பாடி: அவரது சொந்த இடம் கிடையாது. தனியார் இடம். ஜாமீன் கொடுத்தவரை விசாரித்தீர்களா? விருகம்பாக்கத்தில் பெண் காவலர் ஒருவர் திமுக கட்சிகாரர் ஒருவரால் மானபங்கப்படுத்தப்பட்டார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின்: அந்த செய்தி கிடைத்த அடுத்த வினாடியே சம்பந்தப்பட்ட நபர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். நீங்கள் சொல்லித்தான் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக சொல்வது தவறு.

(இதை தொடர்ந்து எடப்பாடி பத்திரிகையில் வந்த சில புகைப்படங்களை காட்டி, இதுபோன்ற குற்றங்களை தடுக்க வேண்டும் என்றார். ஆனால், சபாநாயகரிடம் அனுமதி கேட்டு பேசவில்லை என்பதால் அவை அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டது.)
எடப்பாடி: எதிர்க்கட்சிகள் பிரச்னைகளை சுட்டிக்காட்டிதான் பேச முடியும். அரசுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அமைச்சர் சேகர்பாபு: எதிர்க்கட்சி தலைவர் அதிகமாக உணர்ச்சிவசப்படுகிறார். பொதுமேடையில் பேசும்போது வெடிகுண்டாக மாறுவேன் என்றார். அதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்க முடியுமா?
முதல்வர் மு.க.ஸ்டாலின்: நாங்கள் எதிர்க்கட்சியாக இருந்தபோது எங்களை நீங்கள் பேசவிடவில்லை. நீங்கள் பேசும்போது ஆதாரத்தோடு பேசுங்கள் என்றுதான் சொல்கிறோம்.
எடப்பாடி: தமிழகத்தில் கஞ்சாவை ஒழிக்க ஆபரேஷன் 2.0 என்று கூறினீர்கள். கஞ்சாவை வேகமாக தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முதல்வர் மு.க.ஸ்டாலின்: கஞ்சா, குட்கா பற்றி அதிமுக பேச கூடாது. தமிழகத்ைத போதையில் பிடியில் வைத்திருந்ததே அதிமுக ஆட்சியில்தான். அதிமுக அமைச்சர், முன்னாள் டிஜிபிக்கள் ஆகியோர் மீது விசாரணை நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் போதை பொருளை அடியோடு ஒழிப்போம். இவ்வாறு அவர் கூறினார்.

* சட்டப்பேரவையில் இன்று
முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலுரை
தமிழ்நாடு சட்டப்பேரவை இன்று காலை 10 மணிக்கு கூடியதும் காவல், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை ஆகிய மானியக்கோரிக்கை மீது நேற்று (20ம் தேதி) நடைபெற்ற விவாதத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்து பேசுவார். பின்னர் காவல் மற்றும் தீயணைப்பு துறையினருக்கான பல்வேறு புதிய அறிவிப்புகளை அவர் வெளியிடுவார். இதையடுத்து, அரசினர் சட்டமுன்வடிவுகள் ஆய்வு செய்து நிறைவேற்றப்படும். பின்னர் ஏனைய அரசினர் அலுவலகங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டு சட்டப்பேரவை மீண்டும் கூடும் நாள் தெரிவிக்கப்படாமல் ஒத்திவைக்கப்படும்.

You may also like

Leave a Comment

5 × one =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi