கொடைக்கானலில் வானில் சூரிய ஒளிவட்டம்: சுற்றுலாப்பயணிகள் கண்டு ரசிப்பு

கொடைக்கானல்: கொடைக்கானலில் நேற்று சூரியனைச் சுற்றி ஒளிவட்டம் தென்பட்டது. இதனை சுற்றுலாப்பயணிகள் கண்டு ரசித்தனர். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பகுதியில் நேற்று காலை சூரியனை சுற்றி ஒரு ஒளி வட்டம் சில மணி நேரங்கள் மட்டுமே தென்பட்டது. இதனை கொடைக்கானல் பகுதி பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகள் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர். இதுகுறித்து கொடைக்கானல் வானியல் ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானி கூறியதாவது:

சூரியனையோ அல்லது நிலவைச் சுற்றியோ தென்படும் பிரகாசமான ஒளி வளையத்தை 22 டிகிரி சூரிய ஒளிவட்டம் என்று கூறுகிறோம். இது பெரும்பாலும் முற்பகல் பொழுதில் காணப்படும். இவற்றில் ஒளிச்சிதறலின் – ஒளி அடர்த்தி தன்மையைப் பொறுத்து பிரதான மற்றும் துணை வட்டங்கள் தோன்றும். பூமி வளிமண்டலத்தின் உயர்ந்த மேற்பரப்பில் உருவாகின்ற மெல்லிய மேகங்கள் சிற்றஸ் எனப்படுகிறது. சில சமயங்களில் இவற்றில், 20 மைக்ரான் அளவுக்கும் குறைவான நுண்ணிய பனித் துகளினால் சூரிய கதிர்கள் ஒளிச்சிதறல் அடைகின்றன. இந்த பனி துளிகளால் ஏற்படும் ஒளிச்சிதறல்கள் தான் ஒளிவட்டம் உருவாக காரணம் ஆகும். இதன் முழுவட்ட பரிமாணம் 44 டிகிரி அளவில் இருக்கும். ஆனால் ஒளிவட்டதின் ஆர அளவை கருத்தில் கொண்டு உலகம் முழுவதும் இது 22 டிகிரி சூரிய ஒளிவட்டம் என்று அழைக்கப்படுகிறது.இவ்வாறு கூறினார்.

 

Related posts

யானைகள், புலிகள் நடமாட்டத்தை தொடர்ந்து அரிய வகை செந்நாய்கள் என்ட்ரி : மூணாறு தொழிலாளர்கள் கலக்கம்

ரெட்டியார்சத்திரம் அருகே நான்கு வழிச்சாலை பணிக்காக 40 தென்னை மரங்கள், 2 வீடுகள் அகற்றம் : இழப்பீடு கோரி விவசாயிகள் போராட்டம்

மயிலாப்பூர் நிதி நிறுவன மோசடி வழக்கில் தேவநாதன் உள்பட 3 பேரிடம் விசாரணை தொடங்கியது