கொடைக்கானல்: கொடைக்கானலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நகர், மேல்மலை, கீழ்மலை பகுதிகளில் மின் தடை அறிவித்து பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் நேற்று அறிவிக்கப்படாத மின்தடை பல மணி நேரம் நீடித்தது. இதனால் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர்.
இதுகுறித்து மின்வாரியத்திடம் கேட்ட போது, ‘கொடைக்கானலுக்கு ஆளுநர் ரவி வருகை தரவுள்ளதால் திடீரென பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இதனால் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை இருந்தது. அறிவிப்பு செய்வதற்கு போதிய நேரம் இல்லாததால் முன்னறிவிப்பு செய்யப்படவில்லை’ என்றனர்.