கொடைக்கானல் : திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலுக்கு தொடர் விடுமுறையையொட்டி சுற்றுலாப் பயணிகள் வருகை கணிசமாக அதிகரித்திருந்தது. கடந்த 3 நாட்களாக கொடைக்கானலில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நேற்று மட்டும் சுமார் 8 செ.மீ. மழை பதிவானது. நேற்று காலை முதல் மழை பெய்து வருகிறது. இருப்பினும், மழையை பொருட்படுத்தாமல் சுற்றுலாப் பயணிகள் இயற்கை காட்சிகளை ரசித்து வருகின்றனர்.
கேரளாவில் இருந்து கொடைக்கானலுக்கு வந்த சுற்றுலாப் பயணிகள் 5 பேர், தங்களது பயணத்தை முடித்து கொண்டு நேற்று காலை காரில் ஊருக்குப் புறப்பட்டனர். அவர்களது கார் கொடைக்கானல் – வத்தலக்குண்டு பிரதான மலைச்சாலையில் மூலையாறு அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக ராட்சத மரம் சரிந்து கார் மீது விழுந்தது. இதில் கார் முற்றிலும் நொறுங்கியது.
இதில் காரில் இருந்தவர்களில் 3 பேர் படுகாயமடைந்தனர். இருவர் சிறிய காயங்களுடன் தப்பினர். அனைவரும் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மாற்று வாகனம் மூலம் உடனடியாக வத்தலக்குண்டு அழைத்து செல்லப்பட்டனர். கார் மீது ராட்சத மரம் விழுந்த காட்சி தொடர்பான வீடியோ பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.