Saturday, June 29, 2024
Home » வேறு ஒரு நபருடன் நிச்சயம் செய்ததால் வீடு புகுந்து கத்தி முனையில் காதலியை கடத்திய வாலிபர்: தடுக்க வந்த அக்கா கணவருக்கு சரமாரி அரிவாள் வெட்டு

வேறு ஒரு நபருடன் நிச்சயம் செய்ததால் வீடு புகுந்து கத்தி முனையில் காதலியை கடத்திய வாலிபர்: தடுக்க வந்த அக்கா கணவருக்கு சரமாரி அரிவாள் வெட்டு

by Karthik Yash

சென்னை: கே.கே.நகரில் காதலிக்கு வேறு ஒருவருடன் நிச்சயதார்த்தம் நடந்ததால், தனது நண்பர்களுடன் வீடு புகுந்து, கத்தி முனையில் காதலியை வாலிபர் கடத்தி சென்றார். தடுக்க வந்த காதலியின் அக்கா கணவரை சரமாரியாக அரிவாளால் வெட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை கே.கே.நகர் ஜீவானந்தம் சாலையில் உள்ள நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிப்பு, 11வது பிளாக்கை சேர்ந்தவர் கருணாகரன். இவரது மகள் லாவண்யா (22), தனியார் கல்லூரி ஒன்றில் பி.காம் 2ம் ஆண்டு படித்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த அருள் என்பவரின் மகன் அஜய் (23), லாவண்யாவை காதலித்து வந்துள்ளார். இவர்களின் காதல் விவகாரம் லாவண்யா வீட்டிற்கு தெரியவந்ததால், கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

மேலும், லாவண்யாவுக்கு அவசர அவசரமாக மாரிமுத்து (29) என்பவருக்கு திருமணம் செய்ய முடிவு செய்தனர். அதன்படி நேற்று முன்தினம் லாவண்யாவுக்கும், மாரிமுத்துவுக்கும் இருவீட்டார் விருப்பத்துடன் நிச்சயதார்த்தம் நடந்தது. நிச்சயம் முடிந்து இரவு 8 மணிக்கு அனைவரும் வீட்டில் அமர்ந்து இருந்தனர். அப்போது, சினிமா பாணியில் மின்னல் வேகத்தில் காதலன் அஜய் கத்தியுடன் தனது நண்பர்கள் 5 பேருடன், லாவண்யா வீட்டிற்குள் அதிரடியாக புகுந்து, காதலி லாவண்யாவை தன்னுடன் அழைத்து செல்ல முயன்றனர். அப்போது வீட்டில் இருந்த லாவண்யாவின் சகோதரி பிரியாவின் கணவர் ரோகித்குமார் (27), இவர்களை தடுக்க முயன்றார்.

அப்போது, அஜய் கையில் வைத்திருந்த அரிவாளால் அவரை சரமாரியாக வெட்டியுள்ளார். மேலும் உடன் வந்த நண்பர்களும், ரோகித் குமாரை கடுமையாக தாக்கிவிட்டு வீட்டில் பொருத்தப்பட்டிருந்த டியூப் லைட்டுகளை அடித்து நொருக்கிவிட்டு அங்கிருந்து தப்பினர். இதில் படுகாயமடைந்த ரோகித் குமார், கே.கே.நகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். பின்னர் சம்பவம் குறித்து ரோகித்குமார் அளித்த புகாரின் படி, அஜய் உள்ளிட்ட 6 பேரை போலீசார் தேடி வருகின்றனர். அதேநேரம் லாவண்யா சம்மதத்துடன் அவரது காதலன் கடத்தி சென்றுள்ளதால் போலீசார் இரு குடும்பத்தினருடன் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் கே.கே.நகர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

You may also like

Leave a Comment

8 − 4 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi