Sunday, September 8, 2024
Home » கிச்சன் டிப்ஸ்

கிச்சன் டிப்ஸ்

by Nithya

நன்றி குங்குமம் தோழி

*பால் போளி செய்யும் போது, முதலில் சர்க்கரையும் தண்ணீரும் சம அளவு எடுத்து ஒரு கொதி வரும் வரை காய்ச்சி, பூரிகளை பொரித்து, இந்தப் பாகில் நனைத்து எடுத்து ஒரு கிண்ணத்தில் அடுக்கவும். பரிமாறுவதற்கு சில நிமிடங்களுக்கு முன், பூரிகளின் மீது சூடான பாலை ஊற்றி பரிமாறினால், பூரிகள் தோற்றம் மாறாமல் அதேசமயம் சுவையாகவும் இருக்கும்.

*ஐந்தாறு நாட்களுக்கு மேல் வெளியூர் செல்வதானால்… மிளகாய்ப் பொடி, மஞ்சள் பொடி, மாவு வகைகள் ஆகியவற்றில் கொஞ்சம் உப்பை கலந்து வைத்துவிட்டுச் சென்றால் பூச்சிகள், வண்டுகள் வராமல் இருக்கும்.

*கத்தரிக்காயை கூட்டோ, பொரியலோ எது செய்தாலும் கொஞ்சம் கடலை மாவைத் தூவி 5 நிமிடம் அடுப்பை சிம்மில் வைத்து இறக்கினால் மணம் கமகமன்னு சூப்பராக இருக்கும்.

– சௌமியா சுப்ரமணியன், சென்னை.

*பேரீச்சம்பழம் வாங்கி வெகு நாட்கள் ஆகிவிட்டால் வெளியில் பார்க்க நன்றாக இருக்கும். ஆனால் உள்ளே பிரித்து பார்த்தால் புழு, வண்டு வந்திருக்கும். அது வராமல் இருக்க பேரீச்சம் பழத்துடன் சோம்பு சேர்த்து வைத்தால் புழுக்கள் அண்டாது.

*ஹாட் பாக்சில் வைக்கும் சாதத்தின் சூடு சற்று கூட குறையாமல் இருக்க முதலில் பாதி அளவு சுடுதண்ணீர் ஊற்றி ஐந்து நிமிடம் வைத்திருந்து கொட்டி விட்டு பின்னர் சாதத்தை போட்டு வைத்தால் சாதத்தில் சூடு குறையாமல் அப்படியே இருக்கும்.

*மசாலா பாக்கெட்டுகளை கட் பண்ணி மீதியை பாக்கெட்டோடு வைக்கும்போது அலுமினிய பாயில் மேல் வைத்து இஸ்திரிப் பெட்டியில் அயர்ன் செய்தால் பாக்கெட் நன்கு ஒட்டிக்கொள்ளும். உபயோகிக்கும் போது பாக்கெட்டை கட் பண்ணித்தான் பயன்படுத்த வேண்டும்.

– வசந்தி, திண்டிவனம்.

*தேன் கெடாமலும் நிறம் மாறாமலும் நீண்ட நாள் பாதுகாக்க அது இருக்கும் ஜாடி அல்லது பாட்டிலில் சில கிராம்புகளை சேர்த்து விடவும்.

*பிஸ்கட்டோடு சிறிது சர்க்கரையையும் டப்பாவில் போட்டு வைத்தால் பிஸ்கெட் நமத்துப் போகாமல் இருக்கும்.

*முட்டை சமையலுக்குப் பின் பாத்திரங்களில் முட்டை வாடை நீங்காமல் இருந்தால் கழுவிய பாத்திரங்களில் உபயோகித்த டீதூளை தேய்த்துக் கழுவவும். அல்லது வினிகர் கலந்து நீரில் அலம்பவும்.

– எல்.நஞ்சன், நீலகிரி.

*வாழைக்காய் நறுக்கும் முன் கைகளில் உப்பு தூளைத் தடவிக் கொண்டால், கைகளில் பிசுபிசுப்பும், கரையும் வராது.

*காய்கறிகள் மேல் எலுமிச்சை சாறு பிழிந்து விட்டால், காய்கறிகள் வதங்கிய தன்மை மாறி புதியது போல் இருக்கும்.

*இஞ்சியை ஈரத்துணியால் சுற்றித் தண்ணீர் குடத்தின் மேல் வைத்திருந்தால் பத்து நாள் வரை கெடாமல் புதிதாகவே இருக்கும்.

*பூண்டு உரிப்பதற்கு பலரும் சிரமப்படுவார்கள். சிறிது நேரம் வெயிலில் எடுத்து வைத்த பிறகு உரித்தால், பூண்டு தோலினை எளிமையாக உரிக்கலாம்.

– விஜயலட்சுமி, வேலூர்.

*தட்டை செய்யும் போது மைதா மாவிற்குப் பதிலாக கோதுமை மாவை ஆவியால் வேக வைத்து செய்தால் அதிக ருசியுடன் இருக்கும்.

*பருப்பு இரண்டு முறை கொதித்தவுடன் அரை டீஸ்பூன் நெய் அல்லது ரீபண்ட் ஆயில், கால் டீஸ்பூன் மஞ்சள் தூள் ஆகியவற்றை போட்டால் பருப்பு தண்ணீர் பொங்கி வராது. பருப்பும் சீக்கிரமாக வெந்துவிடும்.

*சமையலுக்கு உபயோகிக்கும் பெருங்காயத்தை முதல் நாள் இரவே தண்ணீரில் ஊறவைத்து மறுநாள் அந்த பெருங்காய நீரை உபயோகித்தால் மணம் சீராக அமையும் பெருங்
காயமும் செலவாகாது.

*மழைக் காலங்களில் உப்பு ஜாடிகளில் ஈரம் கசியும். இதைத் தவிர்க்க இரண்டு, மூன்று பச்சை மிளகாய்களை அதில் போட்டுவிட்டால் ஈரம் கசியாது.

– கே.கவிதா, குரும்பாளையம்.

*பலா சுலை, ஆப்பிள் மிக்சியில் அரைத்து குளிர்ந்த பாலில் வெல்லம் கலந்து மில்க்மெய்ட் சேர்த்து ஃபிரிட்ஜில் வைத்து பருக வித்தியாசமான சுவையில் இருக்கும். அதே சமயம் ஆரோக்கியமாகவும் இருக்கும்.

*தயிர் சாதம் தாளிக்கும் போது, அதில் சிறிதளவு மோர் மிளகாய் சேர்த்து தாளிக்க சுவையாக இருக்கும்.

*வேகவைத்த கடலைப்பருப்பு, வெல்லம், தேங்காய் துருவல், ஏலக்காய் பொடி சேர்த்து போளி செய்ய சுவையாக இருக்கும். மைதா மாவை விட கோதுமையில் செய்தால் ஆரோக்கியமானதாகவும் இருக்கும்.

– டி.கே.வேலு, புதுச்சேரி.

உள்ளி வடை

தேவையானவை:
பெரிய வெங்காயம் – 2,
கடலை மாவு – 1 கப்,
அரிசி மாவு – 1/4 கப்,
பச்சை மிளகாய் – 2,
இஞ்சி – சிறிய துண்டு,
மிளகாய்த்தூள் – 1/2 டீஸ்பூன்,
கறிவேப்பிலை – 10 இலைகள்,
உப்பு – தேவையான அளவு,
எண்ணெய் – பொரிக்க தேவையான அளவு.

செய்முறை: வெங்காயத்தை தோலுரித்து நீளமாகவும் மெலிதாகவும் நறுக்கிக் கொள்ளவும். இஞ்சி மற்றும் பச்சை மிளகாயை பொடியாக நறுக்கவும். ஒரு பாத்திரத்தில் நறுக்கிய வெங்காயத்தோடு உப்பு சேர்த்து நன்கு கைகளால் கலந்து 10 நிமிடங்கள் மூடி வைக்கவும். பின் மிளகாய்த்தூள், கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய் மற்றும் இஞ்சி சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

கடலை மாவை சிறிது சிறிதாக சேர்த்து வெங்காயத்தோடு நன்கு பிசறிக் கொள்ளவும். பின் அரிசி மாவு சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி நன்கு சமமாக பிசைந்து கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் பிசைந்த கலவையில் இருந்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டிப் போடவும். ஒரு பக்கம் பொன்னிறமாக மாறியதும் மெதுவாக திருப்பிப் போட்டு நன்கு மொறுமொறுப்பானதும் தட்டில் மாற்றிக் கொள்ளவும்.

– நாகஜோதி கிருஷ்ணன், சென்னை.

You may also like

Leave a Comment

1 × five =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi