Thursday, July 4, 2024
Home » கிச்சன் டிப்ஸ்

கிச்சன் டிப்ஸ்

by Lavanya

* தேங்காய் வறுத்து அரைக்கும் குழம்பு வகைகளில் அதிகமான எண்ணெய் சத்து இருக்கும். அதை நீக்க வேண்டுமானால், குழம்பை சிறிதுநேரம் ஃப்ரிட்ஜில் வையுங்கள். மேல் பகுதியில் எண்ணெய் படியும். அதனை நீக்கிவிட்டு, குழம்பை சூடாக்கி பயன்படுத்துங்கள்.
* ஆப்பத்துக்கு தயார் செய்யும்போது தேங்காய்ப் பாலுடன் இளநீர் கலந்தால் தேங்காய்ப்பால் இரட்டிப்பு சுவையுடன் இருக்கும்.
* கீரையை வேக விடும்போது சிறிது எண்ணெயை அதனுடன் சேர்த்து வேக வைத்தால் கீரை பசுமையாக, ருசியாக இருக்கும்.
* பாகற்காயை சிறுசிறு வில்லைகளாக நறுக்கி, எலுமிச்சைச் சாறு கலந்து ஊற வைக்கவும். ஒரு வாரத்தில் நன்றாக ஊறிப் பக்குவப்படும். தினமும் குலுக்கி வெயிலில் வைக்க வேண்டும். கசப்பு துளியும் இராது. நீண்ட நாள் கெடாமல் இருக்கும்.
* பாலைக் காய்ச்சுவதற்கு முன், அந்த பாத்திரத்தை நன்கு தண்ணீரால் சுத்தம் செய்த பின்னர் காய்ச்சினால், பால் பாத்திரத்தில் அடி பிடிப்பதை தவிர்க்கலாம்.
* பால் புளிக்காமல் இருப்பதற்கு, ஏலக்காயை பால் காய்ச்சும்போதே அதனுடன் சேர்க்கவும். அவ்வாறு செய்தால் நீண்ட நேரத்திற்கு பால் புளிக்காமல் இருக்கும்.
* தோல் உரித்த உருளைக்கிழங்குகளை கெடாமல் வைப்பதற்கு சில துளிகள் வினிகரைத் தெளித்து ஃப்ரிட்ஜில் வைக்கவும்.
* பாகற்காய் கசப்பு நீங்க, அரிசி களைந்த நீரில் ஐந்து நிமிடம் பாகற்காயை ஊற வைத்தால் கசப்பு இருக்காது.
* புளியமரப் பூ கிடைத்தால், சிறிதளவு எடுத்து உப்பு, மிளகாய், தேங்காய் இவற்றை சேர்த்து அரைத்தால் புளியமரப் பூ சட்னி தயார். மிகவும் சுவையாக இருக்கும்.
* துவையல் அரைக்கும்போது மிளகாயைத் தவிர்த்து மிளகு சேர்த்து அரைக்கலாம். கொழுப்பை நீக்கும் தன்மை கொண்டது மிளகு.
* காய்கறிகளை நறுக்கிய உடனேயே அவற்றை சமைக்க வேண்டும். அப்படி சமைக்காமல், வெகுநேரம் வைத்திருந்தால், காற்று பட்டு, அவற்றில் உள்ள அனைத்து சத்துக்களும் போய்விடும். சத்துகள் போன காய்கறிகளைஉண்பதால் எந்த பலனும் இல்லை. எனவே, நறுக்கிய உடனே சமைத்துவிட வேண்டும்.
* காய்கறிகள் வாடிவிட்டால் கவலை வேண்டாம். ஃப்ரிட்ஜிலிருந்து ஜில்லென்ற தண்ணீரை எடுத்து, அதில் சில துளிகள் எலுமிச்சைச் சாறுவிட்டு அதில் சிறிது நேரம் போட்டுவைத்து எடுத்தால், ஃப்ரெஷ்ஷாகிவிடும். – கவிதா பாலாஜிகணேஷ்.
* வறுபயறு செய்ய முளைக்கட்டிய பருப்புகளை நிழலில் உலர்த்தி, பின் மைக்ரோ அவனில் வைத்து எடுக்க, நன்றாகப் பொரிந்திருக்கும்.
* முந்திரி, பாதாம் போன்றவற்றைச் சீவும்போது, ஈரத்துணியில் சுற்றி வைத்துவிட்டு பின் சீவ மெல்லியதாக ஒரே மாதிரியாக வரும்.
* சமையலில் ஃபுட் கலர் சேர்க்கும்போது தண்ணீரில் கரைத்துச் சேர்த்தால் ஒரே மாதிரியாக கலர் பரவும்.
* அதிக எண்ணெய் குடிக்கும் வெல்லம் சேர்த்து பலகாரங்கள் செய்யும்போது சுக்கை சேர்த்து செய்தால் அஜீரணம் ஏற்படாது.
* அப்பத்தில் வெல்லம் அதிகமாகிவிட்டால் அப்பம் ஒட்டிக்கொண்டு எடுக்க வராது. எடுத்தாலும் வடிவத்துடன் வராது. அதை சரிசெய்ய, அப்ப மாவில் ஒரு கரண்டி எடுத்து அதில் தண்ணீர்விட்டு கூழ் போல தனியாகக் காய்ச்சி அதை மாவில் சேர்த்தால் நன்றாக வரும்.
– இந்திராணி தங்கவேல்.
* வெண்ணெய்க் கட்டி மீது ஒரு தேக்கரண்டி சர்க்கரையைத் தூவி வைத்தால் உலராமல் இருக்கும்.
* சின்ன வெங்காயத்தை வாங்கியதும் வெயிலில் உலர்த்தி எடுத்து வைத்தால், ஒரு மாதம் வரை கெடாமல், முளை வராமல் இருக்கும்.
* வடாம் பிழிய அரிசி மாவில் கூழ் செய்யும்போது, பச்சைமிளகாய், உப்பு, பெருங்காயம், எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கிளறி அச்சில் பிழிவார்கள். அப்படிக் கூழ் செய்யும்போது, மாவுடன் 2 தேக்கரண்டி கசகசா சேர்த்துக் கிளறி கூழ் தயாரிக்கவும். வடாம் பொரிக்கும்போது கமகம வாசனையோடு இருக்கும். சுவையும் நன்றாக இருக்கும்.
* வெஜிடேரியனில் என்ன சூப் வைத்தாலும், அதில் அரை தேக்கரண்டி இஞ்சிச் சாற்றைச் சேர்க்கவும். எந்த சூப்பாக இருந்தாலும் சுவையில் ஸ்பெஷல் சூப் ஆகிவிடும்.
* புளிக்குழம்பு வைக்கும்போது மசாலாவை நல்லெண்ணெயில் வதக்கி, நறுக்கிய காய்கறிகளைப் போட்டபின் புளிக்கரைசலை ஊற்றி உப்பும், தண்ணீரும் சேர்த்தால் குழம்பு ருசியாக இருக்கும்.
* வீட்டிலேயே இட்லி, தோசைப்பொடி அரைக்கும்போது, ஒரு தேக்கரண்டி சீரகத்தை வறுத்து, பருப்பு மற்றும் மிளகாயுடன் சேர்த்து அரைக்க வேண்டும். இந்தப் பொடி வாசனையாக இருப்பதுடன் எளிதில் செரிமானமும் ஆகும்.
– இரா. அமிர்தவர்ஷினி.

You may also like

Leave a Comment

thirteen − seven =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi