Sunday, June 30, 2024
Home » கிச்சன் டிப்ஸ்

கிச்சன் டிப்ஸ்

by Lavanya

* பனீரை வெட்டும் முன்பு கத்தியை சிறிது நேரம் கொதிக்கும் நீரில் போட்டு வைத்திருந்து பிறகு பனீரை வெட்டினால் உடையாமல், உதிராமல் துண்டுகளாக வரும்.
* கடலைமாவு, அரிசிமாவு, பொட்டுக்கடலை மாவை 2:1:1 என்ற விகிதத்தில் கலந்து பஜ்ஜி செய்தால் சமையல் சோடா போடாமலே பஜ்ஜி நன்றாக உப்பி வரும்.
* பாயசமோ, பாதாம் கீர், கேரட் கீரோ நீர்த்துவிட்டால் சிறிது கசகசாவை ஊற வைத்து, மை போல அரைத்துச் சேர்த்து கொதிக்க விட்டால் போதும். கெட்டியாகும்.
* இட்லி மாவு சரியாக புளிக்கவில்லையென்றால் ஹாட் பேக்கில் கொட்டி சில மணி நேரம் மூடி வைத்தால் சீக்கிரம் புளித்துவிடும்.
* தேங்காய்ப்பூ, பச்சைமிளகாய், உப்பு, சிறிது எலுமிச்சைச் சாறு சேர்த்து அரைத்தால் சட்னி வெள்ளைவெளேரென்று இருக்கும். கடுகு தாளிக்கக் கூடாது.
* கொத்துமல்லித் தழையை வாழை இலையில் சுற்றி ஃபிரிட்ஜில் வைத்தால் ஒரு வாரம் வரை கெடாமலிருக்கும்.
* கத்தியின் முனையை உப்பில் அழுத்தி எடுத்து உபயோகித்தால் மீன், இறைச்சியை சுலபமாக நறுக்கலாம்.
* பாகற்காயை இரண்டாக வெட்டி வைத்துவிட்டால் சீக்கிரம் பழுக்காமல் பச்சையாகவே இருக்கும்.
* வத்தக்குழம்பு, காரக்குழம்பில் காரம் அதிகமாகிவிட்டால் சிறிதுதக்காளியை மிக்ஸியில் அரைத்து கலந்தால் போதும். காரம் குறைந்து தக்காளி வாசனையுடன் கலரும் கூடுதலாகும்.
* கூடையில் வைத்திருக்கும் உருளைக்கிழங்கு முளைவிடாமல் இருக்க, கூடவே ஒரு ஆப்பிள் பழத்தை போட்டு வைத்தால் போதும்.
* பீன்ஸ், அவரை போன்ற காய்களை வேக வைக்கும்போது எலுமிச்சை அல்லது தக்காளி ஜூஸ் சிறிது கலந்தால் சீக்கிரம் வெந்துவிடும்.
* அதிக எண்ணெய்ப் பிசுக்குகள் உள்ள பாத்திரத்தில் நான்கு சொட்டு வினிகரை ஊற்றித் தேய்த்தால் பிசுக்கு போய்விடும்.- மல்லிகா அன்பழகன்.
* நூடுல்ஸ் தயாரிக்கும்போது கொதிக்கும் நீரில் நூடுல்ஸைப் போடுவதற்கு முன்பு ஒரு தேக்கரண்டி சமையல் எண்ணெயை ஊற்றினால் நூடுல்ஸ் ஒன்றோடொன்று ஒட்டாமல் இருக்கும்.
* கட்லெட் செய்வதற்கு பிரெட் க்ரம்ப்ஸ் (ரொட்டித்தூள்) இல்லாத சமயத்தில் ரவையை சிவக்க வறுத்து அதில் புரட்டிச் செய்யலாம்.
* பருப்புகளை வேக வைக்கும்போது தண்ணீருடன் சிறிது கடுகு எண்ணெய் சேர்த்து வேக வைத்தால் பருப்பு சீக்கிரம் வெந்துவிடும்.
* தட்டை செய்யும்போது உளுந்தம்பருப்பை வறுத்துப் பொடி செய்து போடுகிறோம். பொட்டுக்கடலை பொடியும் சேர்த்துப் போட்டால் தட்டை கரகரப்பாக இருக்கும். அதிகம் வெண்ணெய் போட வேண்டியதில்லை
* சமைத்து வைத்த கீரை மிச்சமாகிவிட்டால் உளுந்தமாவு அரைத்துக் கீரை வடை செய்து பயன்படுத்தலாம்.
* பூரி, சப்பாத்தி செய்யும்போது மாவு தேவையான அளவு இல்லை என்றால், உருளைக்கிழங்கு அல்லது வள்ளிக் கிழங்கை வேகவைத்துத் தோல் நீக்கி மசித்து அதை கோதுமை அல்லது மைதாவுடன் சேர்த்துப் பிசைந்து பூரி சப்பாத்தி செய்யலாம்.
* இஞ்சி, பூண்டு ஆகியவற்றைத் தட்டியோ, அரைத்தோ சமையலுக்கு சேர்க்கும்போது அவற்றின் தோலை அகற்றிவிடக்கூடாது. தோலுடன் சேர்த்து தட்டி அல்லது அரைத்துப் போட வேண்டும். அப்போதுதான் அவற்றின் முழுமையான மணத்தையும், ருசியையும் பெற முடியும்.
* ஒரு சிட்டிகை சமையல் சோடா சேர்த்துப் பாலைக் காய்ச்சி வைத்தால் நீண்ட நேரம் பால் கெடாமல் இருக்கும்.
* பாயசம், குருமா இவற்றிற்கு தேங்காய்ப்பால் எடுக்கும்போது தேங்காய்த் துருவலுடன் ஒரு தேக்கரண்டி பச்சரிசியை பத்து நிமிடம் ஊறவைத்த பின்பு சேர்த்து மிக்ஸியில் அரைத்தால் கெட்டியான தேங்காய்ப்பால் கிடைக்கும்.
* தேங்காய் சாதம் செய்யும்போது தேங்காய்த் துருவலை பொன் வறுவலாக வறுத்துப் போட்டதும் இரண்டு உளுந்து அப்பளங்களைப் பொரித்து கையால் நொறுக்கி சாதத்துடன் சேர்த்தால் வித்தியாசமான சுவை கிடைக்கும்.
– எல். மோகனசுந்தரி

You may also like

Leave a Comment

four − 2 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi