Sunday, June 30, 2024
Home » கிச்சன் டிப்ஸ்

கிச்சன் டிப்ஸ்

by Lavanya

 

* தக்காளி சாதம் கிளறும்போது, பச்சை மிளகாய், தக்காளி, வெங்காயத்தை அரைத்துவிட்டுச் செய்தால் சுவை கூடுதலாக இருக்கும்.
* நெய்யில் முந்திரியை வறுத்துப் போட்டுவிட்டால் தக்காளி சாதம், பிரியாணி போல் வாசனையாக இருக்கும்.
* முட்டைக்கோஸின் மையத்தில் உள்ள தண்டை வீணாக்காமல் சாம்பாரில் போட்டுச் சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்.
* முள்ளங்கியைக் கேரட் துருவியில் நீளவாக்கில் துருவி, மிதமான நெய்யில் வதக்கிச் சேர்த்தால் சுவையாக இருக்கும். வெயிலுக்கு மிகவும் நல்லது.
* சாம்பார், கீரை, புளிப்புக் கூட்டு போன்றவற்றைக் கொதித்து இறக்கும் நேரத்தில் துளி வெந்தயப்பொடி தூவி இறக்கலாம். நல்ல வாசனையாக இருக்கும். உடலுக்கும் ஆரோக்கியம் தரும்.
* வித்தியாசமான முறையில் பருப்புப்பொடி செய்ய நினைத்தால் பொட்டுக்கடலையுடன் வரமிளகாய், பூண்டு, கொப்பரைத் தேங்காய் வறுத்துச் சேர்த்து பருப்புப்பொடி அரைக்கலாம். பொடி மிகவும் வாசனையாக இருக்கும்.
* சம்பா கோதுமையில் உப்புமா செய்யும்போது கடைசியாக இரண்டு தேக்கரண்டி தேங்காய் எண்ணெய்விட்டு இறக்கி வைக்கவும். உப்புமா அதிக மணமாகவும் ருசியாகவும் இருக்கும்.
* வறுத்த புழுங்கல் அரிசியை அரைத்து மாவாக்கி வைத்துக் கொள்ளவும். கூட்டு, வதக்கல் செய்யும்போது கடைசியாக லேசாகத் தூவி இறக்கினால் மணமாக இருக்கும்.
* சிலர் பொரியலில், முக்கியமாக உருளைக்கிழங்கு பொரியலில் மொறு மொறுப்புக்காகக் கடலைமாவை சேர்ப்பார்கள். கடலை மாவைவிடப் பொட்டுக்கடலை மாவு சேர்த்துச் செய்தால் சுவை கூடும்.– இரா. அமிர்தவர்ஷினி, புதுச்சேரி.
* சர்க்கரை வைக்கும் டப்பாவில் ஒன்றிரண்டு கிராம்புகளைப் போட்டு வைத்தால் எறும்பு வராது.
* உப்பு டப்பாவில் சிறிது அரிசியைப் போட்டு வைத்தால் உப்பு கட்டியாகாமல் இருக்கும். கட்டிகள் உருவாக காரணமாக இருக்கும் உறைவை அரிசி உறிஞ்சிவிடும்.
* கொழுக்கட்டைக்கு மாவு பிசையும்போது நீருடன் சரிபாதி பால் ஊற்றி செய்தால் கொழுக்கட்டை கூடுதல் சுவையுடன் இருக்கும். வெள்ளை வெளேர் என்றும் இருக்கும்.
* நான்கு பிரெட் துண்டுகளை தண்ணீரில் நனைத்து, பூரி மாவுடன் சேர்த்து பிசைந்து பூரி செய்தால் மொறு மொறு பூரி கிடைக்கும்.
* இறைச்சி வேக வைக்கும்போது சிறிது பாக்கையும் சேர்த்து வேக வைத்தால் சீக்கிரம் வெந்துவிடும்.
* பருப்பு அடை செய்யும்போது இஞ்சி, கறிவேப்பிலை, பெருங்காயம், உப்பு, மிளகாய் இவற்றுடன் தாக்காளிப் பழங்களையும் சேர்த்து அரைத்து அடை செய்தால் சுவையாக இருக்கும்.
* பருப்புப்பொடிக்கு அரைக்கும்போது இரண்டு தேக்கரண்டி ஓமம் சேர்த்து அரைத்தால் மணமாக இருக்கும். ஜீரணத்துக்கும் நல்லது.
* அப்பளத்தை ஃப்ரிட்ஜில் வைத்துவிட்டு, தேவைப்படும்போது எடுத்துப் பொரித்தால் சிவந்தும் போகாது எண்ணெயும் அதிகம் குடிக்காது.
* தேங்காய் பத்தைகளை சிறு சிறு துண்டுகளாக்கி ஒரு பாத்திரத்தில் போட்டு, அதன் மீது தண்ணீர் ஊற்றி ஃப்ரிட்ஜில் வைத்துவிட்டால் பத்து நாட்கள் வரை கெட்டுப் போகாமல் இருக்கும்.
* ஒரு டப்பாவில் சிறிது சர்க்கரையைத் தூவி, அதன் மேல், பிஸ்கட்டைப் போட்டு வைத்தால் நீண்ட நாள்கள் நமுத்துப் போகாமல் இருக்கும்.
* கத்தரிக்காயை வேக வைக்கும்போது அதனுடன் ஒரு தேக்கரண்டி தயிரைச் சேர்த்தால் கத்தரிக்காய் நிறம் மாறாமல் இருக்கும். சுவை கூடுதலாக இருக்கும்.
* எலுமிச்சம் பழத்தை ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் வீதம் தண்ணீரில் போட்டு வைத்து எடுத்து வைத்தால் ஃப்ரிட்ஜில் வைக்காமலே ஒரு வாரம் வரை வாடாமல், கெடாமல் இருக்கும்.
* தோசைமாவில் ஒரு தேக்கரண்டி கடலைமாவு சேர்த்துக் கரைத்து தோசை வார்த்தால் ஹோட்டல் தோசையைப் போன்று சுவையாக இருக்கும்.
– அமுதா அசோக்ராஜா, அரவக்குறிச்சிப்பட்டி.
* சர்க்கரைப் பொங்கல் செய்யும்போது அது சூடாக இருக்கும்போதே அரை கிண்ணம் தேங்காய்ப்பால் ஊற்றி கிளறியபின் பரிமாறினால் மிகவும் சுவையாக இருக்கும்.
* தேங்காய்த் துவையலில் தனியாவையும் சிறிது சேர்த்து வறுத்து அரைத்தால் துவையல் மணமாக இருக்கும்.
* ரசப்பொடி கைவசம் இல்லாதபோது ரசம் வைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டால் மிளகு சீரகத்துடன் சிறிதளவு துவரம் பருப்பை வைத்து அரைத்துப் போட்டால் ரசம் சுவையாக இருக்கும்.– ஜி.இனியா, கிருஷ்ணகிரி.

You may also like

Leave a Comment

eight + nineteen =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi