திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி சிறுமியை கடத்தி பாலியல் தொல்லை: பேஸ்புக் காதலன் உட்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு

அம்பத்தூர்: திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி சிறுமியை கடத்தி, பாலியல் தொல்லை கொடுத்த பேஸ்புக் காதலன் உட்பட 3 பேர் மீது போக்சோ வழக்கு பதிந்து, போலீசார் விசாரித்து வருகின்றனர். சென்னை அண்ணாநகர் பகுதியை சேர்ந்த தம்பதி, கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு, அரும்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தனர். அதில், 10ம் வகுப்பு படித்துவிட்டு வீட்டில் இருந்து வந்த தங்களது 17 வயது மகளை காணவில்லை, என்று தெரிவித்து இருந்தனர்.

இதையடுத்து, சிறுமியின் செல்போன் சிக்னலை வைத்து போலீசார் விசாரித்தனர். அப்போது, திருவண்ணாமலை மாவட்டத்தில் சிறுமி இருப்பது தெரிந்தது. உடனே தனிப்படை போலீசார் அங்கு சென்று, ஒரு வீட்டில் இருந்த சிறுமியை மீட்டு, அரும்பாக்கம் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்தனர். அதில், பேஸ்புக் மூலம் பழக்கமான வாலிபர், தன்னை காதலிப்பதாக கூறினார். பின்னர், திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி, திருவண்ணாமலைக்கு அழைத்துச் சென்றார்.

அங்கு, தனது நண்பர்கள் 2 பேருடன் சேர்ந்து, பாலியல் தொல்லை கொடுத்தார். இதையடுத்து, இந்த வழக்கு விசாரணையை அண்ணாநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றினர். அதன்பேரில், 17 வயது சிறுமியை கடத்தி சென்று பாலியல் தொல்லை கொடுத்து, தலைமறைவான பேஸ்புக் காதலன் மற்றும் அவரது நண்பர்கள் 2 பேர் மீது, கடத்தல், போக்சோ உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து, தேடி வருகின்றனர்.

Related posts

வங்கதேசத்தில் பெய்த கனமழையால் முக்கிய ஆறுகளில் வெள்ளம்!

சென்னை பெரம்பூரில் ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி அஞ்சலி

ஆமஸ்ட்ராங் மறைவு செய்தி கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன்: மாயாவதி!