சூளகிரி : சூளகிரி அருகே, மாணவி கடத்தல் தொடர்பாக விசாரணை நடத்த வந்த பெண் இன்ஸ்பெக்டரை, கிராம மக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே காளிங்காபுரம் கிராமத்தைச் சேர்ந்த 17 வயது மாணவி, கடந்த 2 மாதங்களுக்கு முன்பு வீட்டில் இருந்து மாயமானார். அவரை அதே பகுதியை சேர்ந்த 22 வயது வாலிபர் ஒருவர் கடத்திச் சென்று விட்டதாக, அனைத்து மகளிர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில், மாணவியை கடத்திச் சென்றதாக கூறப்படும் வாலிபரின் உறவினர்களான மேடுப்பள்ளியைச் சேர்ந்த 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இதனிடையே, நேற்று காலை இன்ஸ்பெக்டர் ராணி மற்றும் போலீசார் விசாரணைக்காக மேடுப்பள்ளி சென்றனர்.
அப்போது அங்குள்ள டீ கடையில் போலீசார் விசாரணை நடத்திய போது, அங்கு திரண்டு வந்த 50க்கும் மேற்பட்ட கிராம மக்கள், திடீரென இன்ஸ்பெக்டர் ராணியை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்து அங்கு வந்த சூளகிரி போலீசார், கிராம மக்களை சமாதானப்படுத்தினர். தொடர்ந்து விசாரணை நடத்திய போலீசாரிடம், முறையாக விசாரணை நடத்தினால் பொதுமக்கள் ஒத்துழைப்பு தருவோம் என்றனர்.