புதுடெல்லி: காலிஸ்தான் புலி படையின் தலைவர் ஹர்தீப் சிங் நிஜார் கனடாவில் சுட்டு கொல்லப்பட்டார். கடந்த ஆண்டு பஞ்சாப்பின், ஜலந்தரில் ஒரு இந்து மத போதகரை கொலை செய்ய சதி திட்டம் தீட்டியதாக காலிஸ்தான் புலிப்படையை சேர்ந்த 40 பேரை தேடப்படும் தீவிரவாதிகளாக என்ஐஏ அறிவித்தது. அந்த அமைப்பின் தலைவனாக இருந்த ஹர்தீப் சிங் நிஜாரை கண்டுபிடித்து கொடுத்தால் ரூ.10 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. தீவிரவாத செயல்களில் ஈடுபட சதி செய்த வழக்கில் ஹர்தீப் மீது என்ஐஏ குற்றப்பத்திரிகையையும் தாக்கல் செய்திருந்தது. இவன் கனடாவின் சர்ரே பகுதியில் வசித்து வந்தான். அவனை கைது செய்ய ஒன்றிய அரசு தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வந்தது. இந்நிலையில் சர்ரேயில் உள்ள குருத்வாராவுக்கு வெளியே நேற்றுமுன்தினம் சுட்டு கொல்லப்பட்டான். இதுகுறித்து, போலீசார் கூறுகையில்,‘‘ அடையாளம் தெரியாத 2 பேர் ஹர்தீப்பை சுட்டு கொன்றனர். இதில் சம்பவ இடத்தில் அவர் உயிரிழந்தார்’’ என்றனர்.