திருவனந்தபுரம்: கேரள வாகனங்களுக்கு தமிழ்நாட்டில் கூடுதல் வரி வசூலித்தால் தமிழக வாகனங்களுக்கும் கேரளாவில் வரி வசூலிக்கப்படும் என்று கேரள போக்குவரத்துத் துறை அமைச்சர் கணேஷ் குமார் நேற்று சட்டசபையில் கூறினார். கேரள சட்டசபையில் போக்குவரத்துத் துறை அமைச்சர் கணேஷ் குமார் கூறியது: வாகனங்களுக்கு நாடு முழுவதும் ஒரே வரி வசூலிக்க வேண்டும் என்று ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது.
ஆனால் அதை மீறி தமிழ்நாட்டில் கேரள அரசு பஸ்களுக்கு ஒரு சீட்டுக்கு ரூ.4 ஆயிரம் கூடுதல் வரி வசூலிக்கப்படுகிறது. எனவே தமிழ்நாட்டில் இருந்து கேரளாவுக்கு வரும் வாகனங்களுக்கும் இங்கு வரி வசூலிக்கப்படும். சபரிமலை சீசன் சமயத்தில் தமிழ்நாட்டில் இருந்து ஏராளமான வாகனங்கள் கேரளாவுக்கு வரும். கேரள வாகனங்களுக்கு வரி வசூலிப்பதை நிறுத்தாவிட்டால் தமிழ்நாட்டில் இருந்து வரும் வாகனங்களுக்கும் கூடுதல் வரி வசூலிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.