தற்போது பலாப்பழ சீசன் காலம் என்பதால் இங்கிருந்து அதிகளவில் பலா பழங்கள் தமிழகத்திற்கு லாரிகளில் ஏற்றி செல்லப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சராசரியாக ஒரு முழு பலாப்பழத்திற்கு ரூ.20 முதல் ரூ.30 மட்டுமே கேரளாவில் விலையாக உள்ளது. ஆனால் இதே பழங்கள் தமிழ்நாட்டுக்கு கொண்டு வந்து வந்து விற்பனை செய்யப்படும் போது ரூ.200 முதல் ரூ.400 வரை விற்பனை செய்யப்படுகிறது. இதனால் ஒரு பழத்திற்கு சுமார் ரூ.150 முதல் ரூ.200 வரை லாபம் பார்க்கின்றனர். மேலும் தற்போது கேரளாவில் பருவமழை தொடங்கியுள்ளதால் பழங்களை பறிக்க முடியாமல் அங்குள்ள பலாப்பழ விவசாயிகள் திணறி வருகின்றனர்.தென்காசி, செங்கோட்டை பகுதிகளில் கேரளாவில் இருந்து கொண்டு வரப்படும் பலாப்பழம் ஒரு சுளை ரூ.5க்கும் முழு பழம் ரூ.200 முதல் ரூ.500 வரை விற்கப்படுகிறது. கேரளாவில் பலாப்பழ சீசன் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதால், தமிழகத்தில் பலாப்பழத்தின் விலை அதிகமாக உள்ளது.
குற்றால சீசன் வருவதையொட்டி, கேரள எல்லையில் தமிழகத்தில் இருந்து வியாபாரிகள் பலாப்பழ தோட்டங்களை மொத்தமாக குத்தகைக்கு எடுத்து பழங்களை பறித்து சென்று தமிழகத்தில் விற்பனை செய்கின்றனர். இதனால் வியாபாரிகள் பெரிய அளவில் லாபம் சம்பாதிக்கின்றனர். அதே நேரத்தில் விவசாயிகள் நஷ்டம் அடைந்து வருகின்றனர். எனவே, அடுத்த சீசனில் கேரளாவின் எல்லையோர ஊராட்சிகளில் பலாப்பழங்களை இருப்பு வைத்து, சிறு தொழில்களை ஊக்குவிக்க வேண்டும் என்று கேரளா மாநில விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.