வெடிகுண்டு தயாரிக்கும் போது தவறுதலாக வெடித்து பலியானவர்களும் உண்டு. இதனால் சமீப காலமாக கண்ணூரில் ஆள் நடமாட்டமில்லாத பகுதியில் ஏதாவது ஒரு பொருள் கிடந்தால் யாரும் அதன் அருகே கூட செல்வது கிடையாது. இந்நிலையில் நேற்று முன்தினம் கண்ணூர் அருகே செங்களாயி பகுதியிலுள்ள ஒரு ரப்பர் தோட்டத்தில் தொழில் உறுதித்திட்ட பெண்கள் மழைநீரை தேக்குவதற்காக குழிகளை வெட்டிக்கொண்டிருந்தனர். அப்போது பூமிக்கு அடியில் இருந்து ஒரு பழங்கால குடம் கிடைத்தது.
அதைப் பார்த்த அனைவருக்கும் அது வெடிகுண்டாக இருக்கலாமோ என்று பயம் ஏற்பட்டது. இதனால் அங்கிருந்தவர்கள் ஓட்டம்பிடித்தனர். ஆனால் தைரியமாக ஒருவர் அதை எடுத்து தூக்கி வீசினார். இருப்பினும் வெடிப்பதற்கு பதிலாக அந்தக் குடம் இரண்டாக உடைந்தது. அதற்குள் ஏராளமான தங்கப் பதக்கங்கள், முத்துமணி, கம்மல், வெள்ளி நாணயங்கள் இருந்தன. அப்போதுதான் அது ஒரு புதையல் என்று அவர்களுக்கு தெரியவந்தது. போலீசார் விரைந்துவந்து பொருட்களை கைப்பற்றினர்.இது புதையல் தானா என்பது குறித்து ஆய்வு நடத்த தொல்பொருள் துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.