கேரளாவில் பள்ளம் தோண்டியபோது பரபரப்பு: வெடிகுண்டு என பயந்து வீசிய மர்ம குடத்தில் தங்கம், வெள்ளி: ஓட்டம் பிடித்த தொழிலாளர்கள் இன்ப அதிர்ச்சி

திருவனந்தபுரம்: கண்ணூர் அருகே தொழிலாளர்கள் சிலர் பள்ளம் தோண்டியபோது மண்ணுக்குள் இருந்து மர்ம குடம் ஒன்று கிடைத்தது. அதில் வெடிகுண்டு இருப்பதாக கருதி தூக்கி வீசியபோது அதில் இருந்து தங்கம், வெள்ளி உள்பட புதையல் கிடைத்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் கண்ணூர் பகுதி அரசியல் கலவரங்களுக்கு பெயர் பெற்ற பகுதியாகும். ஆள் நடமாட்டமில்லாத இடங்களில் வெடிகுண்டுகள் சர்வ சாதாரணமாக தயாரிக்கப்பட்டு வருகின்றன.

வெடிகுண்டு தயாரிக்கும் போது தவறுதலாக வெடித்து பலியானவர்களும் உண்டு. இதனால் சமீப காலமாக கண்ணூரில் ஆள் நடமாட்டமில்லாத பகுதியில் ஏதாவது ஒரு பொருள் கிடந்தால் யாரும் அதன் அருகே கூட செல்வது கிடையாது. இந்நிலையில் நேற்று முன்தினம் கண்ணூர் அருகே செங்களாயி பகுதியிலுள்ள ஒரு ரப்பர் தோட்டத்தில் தொழில் உறுதித்திட்ட பெண்கள் மழைநீரை தேக்குவதற்காக குழிகளை வெட்டிக்கொண்டிருந்தனர். அப்போது பூமிக்கு அடியில் இருந்து ஒரு பழங்கால குடம் கிடைத்தது.

அதைப் பார்த்த அனைவருக்கும் அது வெடிகுண்டாக இருக்கலாமோ என்று பயம் ஏற்பட்டது. இதனால் அங்கிருந்தவர்கள் ஓட்டம்பிடித்தனர். ஆனால் தைரியமாக ஒருவர் அதை எடுத்து தூக்கி வீசினார். இருப்பினும் வெடிப்பதற்கு பதிலாக அந்தக் குடம் இரண்டாக உடைந்தது. அதற்குள் ஏராளமான தங்கப் பதக்கங்கள், முத்துமணி, கம்மல், வெள்ளி நாணயங்கள் இருந்தன. அப்போதுதான் அது ஒரு புதையல் என்று அவர்களுக்கு தெரியவந்தது. போலீசார் விரைந்துவந்து பொருட்களை கைப்பற்றினர்.இது புதையல் தானா என்பது குறித்து ஆய்வு நடத்த தொல்பொருள் துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related posts

சேலத்தில் ஜவுளி கடைக்குள் புகுந்து அரிவாள் வெட்டு..!!

செங்குன்றத்தில் கஞ்சா கடத்தியவருக்கு 12 ஆண்டுகள் சிறை..!!

கூல் லிப் போதைப்பொருள் வழக்கில், மூன்று நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்ப ஐகோர்ட் கிளை உத்தரவு..!!