இது தொடர்பாக மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு செல்வ விநாயகம் அனுப்பிய சுற்றறிக்கை: மலப்புரத்தில் நிபா வைரஸ் பாதிப்பால் 24 வயது இளைஞர் உயிரிழந்தார். இதனால் தமிழக கேரள எல்லையோர மாவட்டங்களான நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்ட எல்லைகளில் கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்த வேண்டும். ஒவ்வொரு மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளும் நிபா வைரஸ் நோய் தடுப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
மாவட்ட எல்லையோர சோதனைச் சாவடிகளில் 24 மணி நேரமும் மருத்துவ குழுவினர் தயார் நிலையில் இருக்க வேண்டும். வேறு மாநிலத்தில் இருந்து அறிகுறிகளோடு வந்தால் உடனடியாக பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். சந்தேகிக்கும் வகையில் அறிகுறி உள்ள நபர்களை தனிமைபடுத்தி கண்காணிக்க வேண்டும். மேலும் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வரும் பொதுமக்களுக்கு நிபா வைரஸ் அறிகுறிகள் (தலைவலி, உடல் சோர்வு, காய்ச்சல்) தொடர்ந்து இருந்தால் நிபா வைரஸ் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.
அத்துடன் சுகாதாரத்துறை தலைமையகத்திற்கு தெரிவிக்க வேண்டும். மேலும் மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு நிபா வைரஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். கடுமையான மூளையழற்சி நோய்க்குறி (AES) இருக்கும் நோயாளிகள் விவரத்தை சுகாதாரத்துறை இணைதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். குறிப்பாக மலப்புரத்திற்கு அருகில் உள்ள மாவட்டத்தில் மூளையழற்சிக்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளை தொடர்ந்து கண்கணிக்க வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.