திருவனந்தபுரம்: கடந்த சில மாதங்களுக்கு முன் கோழிக்கோட்டில் ஒரு தனியார் சட்டக் கல்லூரியில் நடந்த விழாவில் கேரள நிதியமைச்சர் பாலகோபால் கலந்து கொண்டார். அப்போது முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த ஒரு மாணவி அவருக்கு கை கொடுத்தார். இது ஷரியத் சட்டத்திற்கும், முஸ்லிம் மத நம்பிக்கைக்கும் எதிரானது என்று கூறி மலப்புரம் மாவட்டம் கோட்டக்கல் பகுதியைச் சேர்ந்த அப்துல் நவ்ஷாத் (37) என்பவர் சமூக வலைதளங்களில் பதிவிட்டார். இது குறித்து அறிந்த அந்த மாணவி, நவ்ஷாத் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கோழிக்கோடு குந்தமங்கலம் போலீசில் புகார் செய்தார். இதையடுத்து கலகத்தை ஏற்படுத்த முயற்சித்தது உள்ளிட்ட பிரிவுகளில் நவ்ஷாத் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி நவ்ஷாத் கேரள உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி குஞ்சிகிருஷ்ணன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது நவ்ஷாத் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்ய முடியாது என்று கூறி அவரது மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.தொடர்ந்து நீதிபதி கூறுகையில், எந்த மத நம்பிக்கையும் இந்திய அரசியலமைப்பு சட்டத்தை விட உயர்ந்தது அல்ல என்று தெரிவித்தார்.