கூடலூர்: கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் நிபா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. இந்த வைரஸ் தமிழகத்தில் பரவாமல் தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக – கேரள எல்லைகளில் கண்காணிப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. செப். 18 முதல் 30ம் தேதி வரை கண்காணிப்பு முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், வரும் அக். 15ம் தேதி வரை முகாமை நடத்த வேண்டும் என தேனி மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இதனடிப்படையில் குமுளி எல்லையில் அமைந்துள்ள லோயர் கேம்ப் காவல் சோதனைச் சாவடி அருகே பகலிலும் இரவிலும் பரிசோதனை முகாமை பொது சுகாதாரத் துறை மற்றும் கூடலூர் நகராட்சி இணைந்து நடத்தி வருகிறது.