திருவனந்தபுரம்: கேரள பாஜக ஓபிசி பிரிவு மாநில செயலாளர் ரஞ்சித் ஸ்ரீனிவாசன் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 15 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஆலப்புழாவில் கடந்த 2021ம் ஆண்டு டிச.19ம் தேதி பாஜக ஓபிசி பிரிவு மாநில செயலாளரும், வழக்கறிஞருமான ரஞ்சித் ஸ்ரீனிவாசன் வெட்டிக் படுகொலை செய்யப்பட்டார். ரஞ்சித் ஸ்ரீனிவாஸ் வீட்டிற்குள் புகுந்த கும்பல், அவரது மனைவி, தாய் மற்றும் மகள் முன்னிலையில் வெட்டிக் கொன்றனர். 40 வயதாகும் ரஞ்சித், கடந்த 2016 சட்டமன்ற தேர்தலின் போது பாஜக சார்பாக, ஆழப்புழா சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டவர். எஸ்டிபிஐ மாநில செயலாளர் கே.எஸ்.ஜான் கொலைக்கு பழிக்கு பழியாக ரஞ்சித் ஸ்ரீனிவாசன் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
இந்த சம்பவம் தொடர்பாக பிஎஃப்ஐ அமைப்பை சேர்ந்த 15 பேர் கைது செய்யப்பட்டனர். தடை செய்யப்பட்ட பிஎஃப்ஐ அமைப்பினர் மற்றும் எஸ்.டிபிஐ கட்சியைச் சேர்ந்த 15 பேர் குற்றவாளிகள் என மாவேலிக்கரை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தது. இந்நிலையில் இன்று அவர்களுக்கான தண்டனை அறிவிக்கப்பட்டது. அதன்படி, கேரள பாஜக ஓபிசி பிரிவு மாநில செயலாளர் ரஞ்சித் ஸ்ரீனிவாசன் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 15 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்கி நீதிபதி ஸ்ரீதேவி உத்தரவிட்டுள்ளார்.
நவாஸ், ஷெமீர், நசீர் உள்பட 15 பேருக்கு மரண தண்டனை விதித்து மாவேலிக்கரை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. முதல் 8 குற்றவாளிகள் கொலை வழக்கில் ஈடுபட்டிருப்பதாகவும், மீதமுள்ள 7 பேர் கொலைக்கான சதித்திட்டத்தில் ஈடுபட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலத்தில் 15 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.