திருவனந்தபுரம்: கேரளாவில் பலத்த மழை பெய்யக்கூடும் என்பதால் இன்று மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் தென்மேற்கு பருவமழை சற்று தாமதமாக தொடங்கிய போதிலும் தற்போது தீவிரமடைந்துள்ளது. கடந்த இரு தினங்களாக திருவனந்தபுரம், கொல்லம் உள்பட சில தென் மாவட்டங்கள் தவிர ஏனைய மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இன்று முதல் 4 நாட்களுக்கு கேரளாவில் பரவலாக இடி, மின்னல் மற்றும் காற்றுடன் பலத்த மழை பெய்யும் என்று திருவனந்தபுரம் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 50 கிமீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் இன்று கேரள கடல் பகுதிகளில் மீனவர்கள் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.