திருவனந்தபுரம்: கேரள உயர்நீதிமன்ற நீதிபதியாக இருப்பவர் அனில் கே. நரேந்திரன். அவரது வீடு கொச்சியில் உள்ளது. நேற்று காலை வீட்டின் முன்பு 2 பைகளில் குப்பைகள் கிடந்தன. இது குறித்து நீதிபதி அனில் கே. நரேந்திரன் போலீசுக்குத் தகவல் தெரிவித்தார். உடனே எர்ணாகுளம் மத்திய போலீசார் இது குறித்து விசாரணை நடத்தினர்.
அந்த பகுதியில் வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை பரிசோதித்து குப்பைகளை வீசிச் சென்ற இடுக்கியைச் சேர்ந்த கார்த்திக், காசர்கோட்டை சேர்ந்த சாகுல் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். 2 பேரும் அந்த பகுதியில் உள்ள ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றனர். நிறுவனத்தின் குப்பைகளை வழியில் வீசிவிட்டு சென்று உள்ளனர். ஆனால் அது நீதிபதியின் வீடு என்பது அவர்களுக்குத் தெரியாது என தெரிய வந்தது.