திருவனந்தபுரம்: கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள நெடுமங்காட்டில் ஒரு அரபி பாடசாலை உள்ளது. இங்கு அப்பகுதியை சேர்ந்த சிறுவர், சிறுமிகள் தினமும் சென்று அரபி படித்து வருகின்றனர். இந்த பாடசாலையில் முகம்மது ராசால் ஹக், சித்திக் மற்றும் முகம்மது ஷமீர் ஆகியோர் ஆசிரியர்களாக உள்ளனர். இந்நிலையில் இவர்கள் 3 பேரும் இங்கு படிக்க வரும் சிறுவர்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபடுவதாக திருவனந்தபுரம் குழந்தைகள் நல அமைப்புக்கு புகார் சென்றது.
இதைத் தொடர்ந்து குழந்தைகள் நல அமைப்பினர் அந்த அரபி பாடசாலைக்கு சென்று மாணவர்களிடம் விசாரணை நடத்தினர். இதில் 3 ஆசிரியர்களும் மாணவர்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டது உண்மை என தெரியவந்தது. இது குறித்து குழந்தைகள் நல அமைப்பினர் நெடுமங்காடு போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து முகம்மது ராசால் ஹக், சித்திக் மற்றும் முகம்மது ஷமீரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.