மதுரை: திருமங்கலம் கப்பலூர் சுங்கச்சாவடியில் நாளை நள்ளிரவு முதல் உள்ளூர் வாகனத்துக்கு முழு கட்டணவிலக்கு கிடையாது. திருமங்கலம் அருகே கப்பலூரில் உள்ள சுங்கச்சாவடி விதிகளை மீறி நகரிலிருந்து 2 கிமீ தொலைவுக்குள் உள்ளது. இதனை அகற்ற வேண்டும் என இப்பகுதி மக்கள் 10 ஆண்டுகளுக்கும் மேலாக போராடி வருகின்றனர். இந்தச் சூழலில் கட்டணம் வசூலிப்பதிலும் சுங்கச்சாவடி நிர்வாகம் அடிக்கடி உள்ளூர் மக்களிடம் பிரச்சினையில் ஈடுபட்டு வருகிறது. இதனால் மறியல், உண்ணாவிரதம் என தொடர்ந்து பல்வேறு வடிவங்களில் போராட்டங்கள் நடக்கிறது.
எனினும் சுங்கச்சாவடி நிர்வாகம் இப்பகுதி மக்களின் நம்பிக்கையை பெற எவ்வித நடவடிக்கையும் எடுப்பதற்கு மாறாக, பணம் சம்பாதிக்கும் நோக்கத்தில் மட்டுமே செயல்படுவதாக குற்றச்சாட்டப்படுகிறது. இந்த சூழலில், உள்ளூர் வாகனங்கள் 4 ஆண்டுகளாக சுங்கச்சாவடியை பயன்படுத்தியதற்காக ரூ. 2 லட்சம் முதல் 4 லட்சம் வரையில் கட்டணத்தை ஒருவாரத்தில் செலுத்துமாறு கடந்த 2ம் தேதி சுங்கச்சாவடி நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அப்படி செலுத்தாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளது. திருமங்கலம் கப்பலூர் சுங்கச்சாவடியில் நாளை நள்ளிரவு முதல் உள்ளூர் வாகனத்துக்கு முழு கட்டணவிலக்கு கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை நள்ளிரவு முதல் உள்ளூர் வாகனங்கள் சுங்க கட்டணம் செலுத்த வேண்டும் என்று நிர்வாகம் தெரிவித்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதுவரை முழு கட்டண விலக்கில் சென்று வந்த உள்ளூர் வாகனங்கள் நாளை முதல் 50% கட்டணம் செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.