சென்னை: கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் மாதாந்திர சலுகை பயணச்சீட்டு விற்பனை மையம் நாளை முதல் செயல்படும் என தமிழ்நாடு போக்குவரத்துறை தெரிவித்துள்ளது. கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் – ரயில் நிலையத்தை இணைக்கும் ஆகாய நடைபாதை அமைக்க தமிழ்நாடு அரசு டெண்டர் கோரியது. சென்னையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க, ரூ.400 கோடி மதிப்பீட்டில் கிளாம்பாக்கம் ‘கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் கட்டப்பட்டுள்ளது. இதனை கடந்த டிசம்பர் 30-ம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இந்த பேருந்து நிலையத்தில் தேவையான வசதிகள் படிபடியாக ஏற்படுத்தபட்டு வருகிறது. கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் முழுவதுமாக செயல்பாட்டுக்கு வந்ததை அடுத்து மாதாந்திர சலுகை பயணச்சீட்டு விற்பனை மையம் நாளை துவங்கப்படும் என போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக போக்குவரத்து துறை வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்;
கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில், பொதுமக்கள் நலன் கருதி நாளை முதல் மாநகர் போக்குவரத்துக் கழக மாதாந்திர சலுகை பயணச்சீட்டு விற்பனை மையம் செயல்பட உள்ளது. இந்த பயணச்சீட்டு விற்பனை மையத்தில், விருப்பம்போல் பயணம் செய்யக்கூடிய ரூ.1000 மதிப்பிலான பயண அட்டை (ஒவ்வொரு மாதமும் 16ம் தேதி முதல் அடுத்த மாதம் 15ம் தேதி வரை), மாதாந்திர சலுகை பயண அட்டை (மாதந்தோறும் 1ம் தேதி முதல் 22ம் தேதி வரை) மற்றும் 50 சதவீதம் மாணவர் சலுகை பயண அட்டை (ஒவ்வொரு மாதமும் 11ம் தேதி முதல் அடுத்த மாதம் 10ம் தேதி வரை) பயணம் செய்யக்கூடிய பயணச்சீட்டுகள் மாதந்தோறும் 1ம் தேதி முதல் 13ம் தேதி வரை வழங்கப்படும். மேலும், 60 வயது பூர்த்தியடைந்த மூத்த குடிமக்களுக்கான கட்டணமில்லா பயண அட்டையுடன் 10 எண்ணிக்கை கொண்ட டோக்கன்கள், கிளாம்பாக்கம் பணிமனையிலும் வழங்கப்படும். எனவே, பயணிகள் இதனை பயன்படுத்தி கொள்ளலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.