புதுடெல்லி: டெல்லி மதுபானக் கொள்கை விவகாரத்தில் கடந்த மார்ச் 21ம் தேதி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். இதை எதிர்த்து அவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், கடந்த 10ம் தேதி அவருக்கு, ஜூன்1ம் தேதி வரையில் இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் படி ஜூன் 2ம் தேதி அரவிந்த் கெஜ்ரிவால் விசாரணை அமைப்பின் மூலம் திகார் சிறையில் சரணடைய வேண்டும். இந்தநிலையில், அண்மை காலத்தில் அவரது உடல் எடை 7 கிலோ வரை குறைந்துவிட்டதால், மருத்துவ பரிசோதனை செய்ய வசதியாக இடைக்கால ஜாமீனை மேலும் ஒருவாரம் நீடிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில், கெஜ்ரிவால் மனு செய்தார்.
இந்த மனுவை உடனடியாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளக் கோரி உச்ச நீதிமன்றத்தின் கோடைக்கால சிறப்பு அமர்வு நீதிபதிகள் ஜே.கே.மகேஸ்வரி மற்றும் கே.வி.விஸ்நாதன் ஆகியோர் முன்னிலையில் அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி நேற்று ஒரு முறையீட்டை வைத்தார். இந்த கோரிக்கையை ஏற்க நீதிபதிகள் மறுத்துவிட்டனர். இந்த புதிய இடைக்கால மனுவை பட்டியலிடுவது குறித்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தான் முடிவெடுக்க வேண்டும். நீங்கள் அவரிடம் தான் சென்று முறையிட வேண்டும் என்று உத்தரவிட்டனர்.