இருப்பினும் இதே விவகாரத்தில் சிபிஐ வழக்கு பதிவு செய்து கெஜ்ரிவாலை கைது செய்துள்ளதால், இடைக்கால ஜாமீன் கிடைத்தும் கெஜ்ரிவாலால் சிறையில் இருந்து வெளியில் வரமுடியவில்லை. இதையடுத்து மதுபானக் கொள்கை வழக்கு விவகாரத்தில் சிபிஐ கைது நடவடிக்கைக்கு எதிராகவும், சிபிஐ வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்க கோரியும் கெஜ்ரிவால் தாக்கல் செய்திருந்த மனுவை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம், ‘கெஜ்ரிவால் கைது நடவடிக்கையை சட்டவிரோதம் என்று கூற முடியாது. சிபிஐ தொடர்ந்த வழக்கில் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்க முடியாது’ எனக்கூறி அவரது மனுவை கடந்த 5ம் தேதி தள்ளுபடி செய்தது.
இந்நிலையில் உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து கெஜ்ரிவால் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் இன்று மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், ‘டெல்லி மதுபான கொள்கை தொடர்பான வழக்கில் தகுதியின் அடிப்படையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை விசாரித்து தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும். சிபிஐ கைது நடவடிக்கையை சட்ட விரோதம் என்று அறிவிக்க வேண்டும். இந்த விவகாரத்தில் டெல்லி உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவை ரத்து செய்ய வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் ஜாமீன் பெற்று இருக்கும் கெஜ்ரிவால், தற்போது சிபிஐ வழக்கில் உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கும் பட்சத்தில் அவர் விரைவில் சிறையில் இருந்து வெளியில் வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.