டெல்லி: அரவிந்த் கெஜ்ரிவாலை முதலமைச்சர் பதவியில் இருந்து நீக்கக் கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. டெல்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அம்மாநில முதல்வர் கெஜ்ரிவால், நீதிமன்ற காவலில் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அரவிந்த் கெஜ்ரிவாலை முதலமைச்சர் பதவியில் இருந்து நீக்கக் கோரி இந்து சேனா தலைவர் விஷ்ணு குப்தா டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில்; முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை பதவியில் இருந்து டிஸ்மிஸ் செய்ய டெல்லி லெப்டினன்ட் கவர்னருக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்.
எல்ஜி வழியாக மத்திய அரசு மூலம் டெல்லியை இயக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இந்நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது கெஜ்ரிவாலை முதலமைச்சர் பதவியில் இருந்து நீக்கக் கோரிய மனு தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார். அமலாக்கத்துறையால் கைதாகியுள்ள டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என டெல்லி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இரண்டாவது மனுவும் நிராகரிக்கப்பட்டுள்ளது. “மாநிலத்தை நாங்கள் நிர்வாகிக்கவில்லை. எல்லாவற்றுக்கும் நீதிமன்றம் தீர்வை அளிக்க முடியாது” என நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.