ராணிப்பேட்டை மாவட்டம், காவேரிப்பாக்கத்தில், சுமார் 1,700 ஆண்டுகள் பழமையான பல்லவர் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட கோட்டை அபய வரதராஜ பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இக்கோயின் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், போதிய நிதியின்மையால் பணிகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இதனால் கோயில் சில வருடங்களுக்கு முன்பு இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.
அதன் பின்னர், கோயில் பூட்டியே கிடந்ததால் பூஜைகள் இன்றி வளாகத்தில் புதர்கள் மண்டி சிதிலமடைந்து காணப்பட்டது. இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறநிலையத் துறை அதிகாரிகள் மூலம் மீண்டும் கோயில் திறக்கப்பட்டது. இதனையடுத்து கோயில் பட்டாச்சாரியராக அருளாநம்பி நியமிக்கப்பட்டு கோயில் பராமரிக்கப்பட்டு வருகிறது. மேலும், இக்கோயில் கும்பாபிஷேகம் பெற வேண்டி பக்தர்கள் சார்பில், தொடர்ந்து 12 மணி நேரம், ஏகதின அகண்ட விஷ்ணுசகஸ்ர நாம பாராயணம் நிகழ்ச்சி இரண்டு வாரங்களுக்கு முன்பு நடைபெற்றது.
இந்நிலையில், இக்கோயிலில் கடந்த சில தினங்களாக பக்தர்கள் சார்பில் உழவாரப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால் கோயில் வளாகத்தில் கிடந்த புதர்கள் அகற்றப்பட்டு புதுப் பொலிவுடன் காணப்படுகிறது. மேலும், இக்கோயில் கும்பாபிஷேகம் நடக்க வேண்டும் என்பது பக்தர்களின் கோரிக்கையாக உள்ளது.