காவிரி தொடர்பாக அனைத்துக் கட்சி கூட்டமா அல்லது கர்நாடக முதல்வருக்கு கடிதம் எழுதுவதா என முதலமைச்சர் முடிவெடுப்பார் :அமைச்சர் துரைமுருகன்

வேலூர் : காவிரி தொடர்பாக அனைத்துக் கட்சி கூட்டமா அல்லது கர்நாடக முதல்வருக்கு கடிதம் எழுதுவதா என முதலமைச்சர் முடிவெடுப்பார் என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். வேலூரில் ஊரகப் பகுதிகளில் அரசு நிதி உதவி பெறும் தொடக்கப்பள்ளிகளில் 1-5 வகுப்பு பயிலும் 81 மாணவ மாணவிகளுக்கு விரிவாக்கப்பட்ட முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தைத் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கர்நாடகாவில் தற்போது 4 அணைகளிலும் போதிய தண்ணீர் இருப்பு உள்ளது. காவிரி நதிநீர் ஒழுங்காற்று குழு தினசரி தமிழகத்திற்கு ஒரு டி.எம்,சி தண்ணீரை திறக்க உத்தரவிட்டது. ஆனால் ஒரு டிஎம்சி தண்ணீரை தமிழகத்திற்கு தர கர்நாடக அரசு மறுக்கிறது.

ஒரு டிஎம்சி என்பது 11,000 கன அடி ஆகும். ஆனால் 8,000 கனஅடி தண்ணீர் தரப்படும் என கர்நாடகா முதல்வர் சித்தராமையாக தெரிவித்துள்ளார். கர்நாடகா கொடுக்க மாட்டேன் என சொன்னாலும் மழை பெய்தால் தண்ணீர் வந்துதான் ஆக வேண்டும். நீண்ட நெடிய காவிரி பிரச்னையை என்னால் முடிந்த அளவுக்கு கையாண்டு வருகிறேன். கர்நாடகாவில் உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிக்காமல் இருக்கிறார்கள். இதற்கு நிரந்தர தீர்வை உச்சநீதிமன்றம் தான் தர வேண்டும். அவர்கள் உரிமையை அவர்கள் கேட்கிறார்கள்; நமது உரிமையை நாம் கேட்கிறோம். காவிரி பிரச்னை தொடர்பாக, முதல்வர் மு.க.ஸ்டாலின் என்னிடம் ஆலோசனை நடத்தினார். காவிரி தொடர்பாக அனைத்துக் கட்சி கூட்டமா அல்லது கர்நாடக முதல்வருக்கு கடிதம் எழுதுவதா என முதலமைச்சர் முடிவெடுப்பார்,”இவ்வாறு தெரிவித்தார்.

Related posts

கட்சிகளை உடைக்கும் வேலையை பாஜக செய்கிறது: ஹேமந்த் சோரன் பரபரப்பு குற்றச்சாட்டு

ரஷ்ய ராணுவத்தில் இருந்த கேரள இளைஞர் உயிரிழப்பு

ஆகஸ்ட் 19: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை