கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ. 14.71 லட்சத்துக்கு நாட்டுச்சர்க்கரை ஏலம்: பழனி முருகன் கோவிலுக்கு 501 மூட்டை கொள்முதல்

 

ஈரோடு, ஏப். 25: ஈரோடு மாவட்டம், கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ. 14.71 லட்சத்துக்கு நேற்று முன்தினம் நாட்டுச்சர்க்கரை ஏலம் நடைபெற்றது. கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் கரும்புச் சர்க்கரை எனப்படும் நாட்டுச் சர்க்கரை ஏலம் நடைபெற்றது. இந்த ஏலத்தில் விற்பனை செய்ய சுற்றுவட்டாரப் பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 1,111 மூட்டை சர்க்கரையை கொண்டு வந்திருந்தனர். இதில் 60 கிலோ எடை கொண்ட ஒரு மூட்டை, முதல் தரம் ஒரே விலையாக ரூ. 25.55க்கும், இரண்டாம் தரம் குறைந்தபட்ச விலையாக ரூ. 24.70க்கும், அதிகபட்ச விலையாக ரூ. 24.80க்கும் ஏலம் போனது.

இந்த ஏலத்தில் மொத்தம் 30 ஆயிரத்து 60 கிலோ எடையிலான 501 மூட்டைகள் நாட்டுச் சர்க்கரை, ரூ. 12 லட்சத்து 49 ஆயிரத்து 990க்கு பழனி, தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்காக கொள்முதல் செய்யப்பட்டது. தவிர, இந்த ஏலத்தில் பங்கேற்ற இதர வியாபாரிகள் 5,400 கிலோ எடையிலான 90 மூட்டைகள் நாட்டுச் சர்க்கரையை ரூ.2 லட்சத்து 21 ஆயிரத்து 300க்கு கொள்முதல் செய்தனர். இந்த ஏலத்தில் மொத்தம் ரூ. 14 லட்சத்து 71 ஆயிரத்து 290க்கு விற்பனை நடைபெற்றதாக விற்பனைக் கூடத்தின் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

Related posts

சீர் மரபினர் நல வாரியம் உறுப்பினராக சேர விண்ணப்பங்கள் வரவேற்பு

புகையிலை பொருட்களை கடத்தியவர் கைது

முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு திசையன்விளையில் மின்னொளி கைப்பந்து போட்டி