செங்கல்பட்டு: காட்டாங்கொளத்தூரில் சிறப்பு வகுப்பு நடத்திய தனியார் பள்ளிக்கு முதன்மை கல்வி அலுவலர் எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழகத்தில் உள்ள அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளுக்கு, வரும் 28 முதல் அக்., 6ம் தேதி வரை காலாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலை அருகே உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களை பள்ளிக்கு வரவைத்து சிறப்பு வகுப்புகள் நடைபெற்று வருவதாக செங்கல்பட்டு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கற்பகத்திற்கு தொடரந்து புகார்கள் வந்தவண்ணம் இருந்தது.
இதில், காட்டாங்கொளத்தூர் சிறப்பு வகுப்பு நடைபெற்ற பள்ளியில் இருந்து மாணவர்களை பள்ளியில் இருந்து வெளியேற்ற செங்கல்பட்டு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவுவிட்டார். இதனை தொடரந்து, மதியம் 12.45 மணிக்கு 9, 10, 11, 12ம் வகுப்பு மாணவர்களை பள்ளியில் இருந்து ஆசிரியர்கள் வீட்டிற்க்கு அனுப்பி வைத்தனர். அரசு அனுமதியை மீறி சிறப்பு வகுப்புகள் நடைபெற்றும் பள்ளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என செங்கல்பட்டு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடதக்கது.