ஜம்மு: காஷ்மீரின் பூஞ்ச் பகுதி வழியாக சென்ற ராணுவ வாகனம் மீது நடத்தப்பட்ட தாக்குதலால், அங்கு தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. ஜம்மு – காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டம் கிருஷ்ணகாட் வழியாக பாதுகாப்பு படையினரின் வாகனம் சென்றது. அந்த வாகனத்தின் பின்னால் சென்ற கான்வாய் மீது நேற்றிரவு தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த சம்பவத்தில் ராணுவ வீரர்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
தீவிரவாதிகள் அப்பகுதியில் பதுங்கியிருக்க வாய்ப்புள்ளதால், அப்பகுதியை ராணுவத்தினர் சுற்றிவளைத்து தீவிர தேடுதல் வேட்டையை நடத்தி வருகின்றனர். முன்னதாக கடந்த டிசம்பர் 21ம் தேதி, பூஞ்ச் பகுதியில் உள்ள தேரா கி காலி என்ற இடத்தில், இதே போன்ற தாக்குதல் நடத்தப்பட்டது. அன்று நடந்த சம்பவத்தில் 4 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.