நம் வீட்டு அஞ்சறைப் பெட்டியில் அதிகம் பயன்படுத்தப்படாமல் அமைதியாக இருக்கும் ஒரு பொருள் கசகசா. ஆனால் இது உடலுக்கு உட்புறம் மட்டுமல்ல , உடலுக்கு வெளிப்புறமும் சரும ஆரோக்கியத்தில் பல நலன்களைக் கொடுக்க வல்லது. இதோ முகம் பிரகாசிக்க சில கசகசா மாஸ்க்கள்.
தயிரில் கசகசாவை சேர்த்து கலந்து முகத்தில் ஸ்க்ரப்பர் போல் பயன்படுத்த இறந்த செல்கள், வறண்ட சருமப் பிரச்னைகள் சரியாகி முகம் புத்துணர்வு பெறும்.
பாலுடன் கசகசாவை சேர்த்து அரைத்து அந்தக் கலவையுடன் சிறிது தேன் சேர்த்து முகத்தில் தடவி 10 நிமிடங்கள் கழித்து கழுவ வறண்ட, சுருக்கங்கள் நிறைந்த சருமம் புத்துணர்வு பெற்று உடனடி பளபளப்புக் கிடைக்கும்.
சிலருக்கு வெயில் அதிகமானால் அரிப்பு, எரிச்சல் சருமத்தில் உண்டாகும். அவர்கள் பாலில் கசகசாவை ஊறவைத்து, அத்துடன் சிறிது எலுமிச்சைச் சாறு கலந்து பாதிக்கப்பட்ட இடத்தில் தடவிவர குணமாகும்.
கைநிறைய கசகசாவை எடுத்துக்கொண்டு உடன் தயிர், வெள்ளை நிற மிளகு கலந்து அரைத்து அதனை அப்படியே தலை முடியில் பேக் போல் தடவிக் கொண்டு ஒரு மணி நேரம் அப்படியே ஊறவிடவும். பொடுகுத் தொல்லை
இனி இல்லை என சொல்வீர்கள்.
கசகசா , புதிதாக எடுத்த தேங்காய்ப்பால், உடன் சின்ன வெங்காயம் சேர்த்து அரைத்து முடியில் தடவி 20 நிமிடங்கள் வரை ஊற வைக்கவும். பின்னர் ஷாம்பூ கொண்டு தலைமுடியை அலசவும். இதனைத் தொடர்ந்து சில வாரங்கள் செய்ய தலைமுடி வளர்ச்சியில் முன்னேற்றம் தெரியும்.
– கவின்