கர்ப்பப்பை வாய்த் தொற்று… தடுப்பது எப்படி?

பெரும்பாலான பெண்களுக்கு வெளியே சொல்ல முடியாத அல்லது இதற்கு முறையான தீர்வு என்ன என்பதில் பல குழப்பங்களுமாக இருக்கும் பிரச்னை மாதவிடாய் சுழற்சிக்கு பின் நிகழும் கர்ப்பப்பை வாய்த் தொற்றுப் பிரச்னைதான். பிறப்புறுப்பில் அரிப்பு, வறட்சி மற்றும் அது சார்ந்த உட்சுவர் பாதிப்புகள் துவங்கி கர்ப்பப்பை வரை கூட இந்த தொற்றுகள் பாதிப்பை உண்டாக்கும். என்ன செய்யலாம் எப்படித் தடுக்கலாம் சொல்கிறார் மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர் Dr.நித்தியா (MBBS,DGO,DNB, Reproductive medicine & IVF).

மாதவிடாய் சுழற்சியின் பின்னர் உருவாகும் நோய்த்தொற்றுகளுக்கான காரணங்கள்

கர்ப்பப்பை வாய் நோய்த்தொற்றுகள், குறிப்பாக மாதவிடாய் சுழற்சிக்கு பின் பல பெண்களுக்கு உண்டாகும் ஒரு பொதுவான பிரச்னை. மாதவிடாய்க்குப் பிறகு, கர்ப்பப்பை வாய் அதன் pH அளவுகள் மற்றும் பாக்டீரியா அளவில் ஏராளமான மாற்றங்களுக்கு உட்படுகிறது. இந்த மாற்றப்பட்ட சூழல் நோய்த்தொற்றுகளுக்கு எளிதில் வழிவகுக்கும். இந்த நேரத்தில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள் உடலின் நோயெதிர்ப்பு சக்தியையும் குறைப்பதால் நோய்க்கிருமிகள் அதிகரிக்க வாய்ப்புகளைஉண்டாக்குகின்றன.

பொதுவான தொற்றுகளின் வகைகள்

பாக்டீரியா வஜினோசிஸ் (BV), ஈஸ்ட் தொற்றுகள் (கேண்டிடியாசிஸ்) மற்றும் பாலியல் தொடர்புகள் மூலம் பரவும் நோய்த்தொற்றுகள் (STIs) உள்ளிட்ட நோய்த்தொற்றுகள் இந்த காலக் கட்டத்தில் பரவும். நல்லவை செய்யும் பாக்டீரியாக்களின் அளவுகளில் ஏற்றத் தாழ்வு உண்டானால் கூட பிவி பாக்டீரியா பிரச்னை உண்டாகும். கேண்டிடா ஈஸ்ட் தொற்றால் கேண்டிடியாஸிஸ் என்னும் அரிப்பு பிரச்னை உண்டாகலாம், ஹார்மோன் மாற்றங்கள் காரணமாகவும் தீவிரமடையலாம். பாலியல் தொடர்பு மூலம் கிளமிடியா மற்றும் கோனோரியா உள்ளிட்ட பரவும் தொற்றுகள் மூலம் கர்ப்பப்பை வாய் பலவீனமாகமாறுவதற்கும் வாய்ப்புகள் அதிகம்.

தடுக்கும் வழிமுறைகள்

சுகாதாரமான பழக்கங்கள்: மிதமான, வாசனையற்ற சோப்பு மற்றும் தண்ணீரைக் கொண்டு மென்மையாக தூய்மை செய்தல். அதிக வாசனை கொண்ட சோப்புகள், கடுமையான வாஷ்களை தவிர்ப்பதால் pH அளவு சமநிலையை பராமரிக்க உதவும். பாதுகாப்புக் கவசம் அவசியம்: பாலியல் மூலம்பரவும் தொற்றைத் தவிர்க்க உடலுறவின் போது போதிய பாதுகாப்பு நடைமுறைகளைப் பழகிக் கொள்வது நல்லது. குறிப்பாக ஆணுறை பழக்கம் மிக அவசியம். நோய் தொற்றுகளின் அபாயத்தைக் குறைக்கிறது.

மாதவிடாய் கால பாதுகாப்பு:

மாதவிடாய் காலங்கள் நன்கு காற்று புகும் ஆடைகள், உள்ளாடைகள் பயன்பாடு அவசியம். சானிட்டரி பேட், கப், டேம்பான்கள் என எதுவாயினும் அதிகம் கெமிக்கல்கள் அல்லாத புராடெக்ட்களை பயன்படுத்தவும். சுவாசிக்கக்கூடிய மற்றும் உயர்தர மாதவிடாய் தயாரிப்புகளைத் தேர்வு செய்யவும். பாக்டீரியாக்களின் வளர்ச்சியைத் தடுக்க, சானிட்டரி பேட்களை அவற்றை அடிக்கடி மாற்றம் செய்வதும் அவசியம்.

புரோபயாடிக்குகள் மற்றும் ஆரோக்கியமான உணவு:

புரோபயாடிக் எனப்படும் நோய் எதிர்ப்பாற்றல் அதிகம் நிறைந்த பழங்கள், காய்கறிகள் மற்றும் முழு தானியங்கள் நிறைந்த சீரான உணவை உட்கொள்வதன் மூலம் ஆரோக்கியம் தரும் நுண்ணுயிர் சமநிலையை பராமரிக்கலாம். இதன் மூலம் கர்ப்பப்பை மற்றும் கர்ப்பப்பையின் வாய் ஆரோக்கியத்தை மேம்படுத்த முடியும்.

கருப்பை ஆரோக்கியத்திற்கான மருத்துவ ஆலோசனைகள்

♦நாமாகவே நமக்குத் தெரிந்த கைவைத்தியங்கள் மூலம் சில நோய்த்தொற்றுகளுக்கு தற்காலிக நிவாரணம் பெறலாம், ஆனால் துல்லியமான நோயறிதல் மற்றும் பொருத்தமான சிகிச்சையுடன் மருத்துவ நிபுணரிடம் ஆலோசனை பெறுவது மிகவும் அவசியம்.
♦ BV நுண்ணுயிர் எதிர்ப்பிகள் அல்லது ஈஸ்ட் தொற்றுக்கான பூஞ்சை காளான் சிகிச்சைகள் போன்ற பரிந்துரைக்கப்பட்ட மருந்துகள் மூலம் நிரந்தர தீர்வு கிடைக்கும்.
♦சரியான நேரத்தில் கொடுக்கப்படும் மருத்துவ சிகிச்சைகள், மற்றும் வழிகள் தொற்றுகளின் வீரியம் அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ள உதவும்.
♦சரியான மாதவிடாய் காலமருத்துவ ஆலோசனைகள், தூய்மை குறித்த விழிப்புணர்வுகள் மற்றும் சமூகங்களில் பாலியல் ஆரோக்கியம் பற்றிய வெளிப்படையான விவாதங்களை ஊக்குவிப்பதன் மூலம் இந்த பிறப்புறுப்பு தொற்றுப் பிரச்னைகளை கணிசமாகக் குறைக்கலாம்.

மாதவிடாய் சுழற்சிகளுக்குப் பின் பொதுவாகவே அந்தரங்க உறுப்புகளில் அரிப்பு, எரிச்சல், சிவந்துவிடுதல் போன்ற பிரச்னைகள் இருப்பின் சாதாரணமாக விட்டுவிடாமல் தகுந்த மருத்துவ ஆலோசனைகள் பெற்று ஆரம்பத்திலேயே பிரச்னைகளைக் கண்டறிந்து தீர்வு பெறுவதுதான் நல்லது. பல மணி நேரம் உட்கார்ந்தே வேலை செய்தல், பல கிலோமீட்டர்கள் இருசக்கர வாகனப் பயணம், கணினி, மொபைல் உள்ளிட்ட எலக்ட்ரானிக் கருவிகளால் உண்டாகும் வெப்பம் இதனால் அந்தரங்க உறுப்புகள் வறண்டு பாக்டீரியாக்கள் தொற்று, ஈஸ்ட் தொற்றுகள் உண்டாகலாம். பிரச்னைகளே இல்லை என்றாலும் கூட அவ்வப்போது நம் உடல் குறித்து மருத்துவ ஆலோசனைகள் பெறுவது மிகவும் நல்லது.

– ஜாய் சங்கீதா

Related posts

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்!

மருதாநதி, குண்டேரிப்பள்ளம் நீர்த்தேக்கத்திலிருந்து தண்ணீர் திறந்துவிட தமிழக அரசு உத்தரவு

வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் முடிவில் 339 ரன்களை குவித்தது இந்தியா