பெங்களூரு: வரலாற்று சிறப்புமிக்க மைசூரு தசரா விழா துவக்க நிகழ்ச்சி மைசூரு மாநகரில் உள்ள சாமுண்டி மலையில் நடந்தது. முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே.சிவகுமார், அமைச்சர்கள் முன்னிலையில் சாமுண்டீஸ்வரி தேவிக்கு பூஜை செய்து தசரா விழாவை பிரபல இசையமைப்பாளர் ஹம்சலேகா தொடங்கி வைத்தார். இவ்விழாவில் முன்னிலை வகித்து முதல்வர் சித்தராமையா பேசும்போது, ‘தசரா விழா கொண்டாடுவதின் மூலம் நமது மாநிலத்தின் பண்பாடு, கலாச்சாரம், மொழி, கலை, இலக்கியம் ஆகியவற்றை உலகத்திற்கு தெரிவித்து வருகிறோம். மாநிலத்தில் இவ்வாண்டு தென்மேற்கு பருவமழை எதிர்பார்த்தளவு பெய்யாமல் ஏமாற்றி விட்டது. விவசாயிகள் முகத்தில் கவலை ரேகை படர்ந்துள்ளது. மழை பற்றாக்குறை காரணமாக 42 லட்சம் ஹெக்டேர் நிலத்தில் பயிர் செய்துள்ள விளைச்சல்கள் நாசமாகியுள்ளது. இதனால் ரூ.30 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது ’ என்றார்.