இதனால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து நாளை மேலும் அதிகரிக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்கவும், பரிசல் பயணம் செய்யவும் விதிக்கப்பட்ட தடை, தொடர்ந்து 7வது நாளாக நீடிக்கிறது. மேலும், காவிரி கரையோரங்களில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அதே போல், மேட்டூர் அணைக்கும் நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று காலை விநாடிக்கு 64,033 கனஅடியாக இருந்த நீர்வரத்து, இரவு 8 மணி நிலவரப்படி 78,238 கனஅடியாக அதிகரித்தது.
நீர்மட்டம், நேற்று இரவு 78.55 அடியாக உயர்ந்துள்ளது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1000 கனஅடி வீதம் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 40.52 டிஎம்சி ஆக உள்ளது. நீர்மட்டம் 78 அடியாக உயர்ந்துள்ளதால், பண்ணவாடி பரிசல் துறையில் நீருக்கு வெளியே தெரிந்த கிறிஸ்தவ ஆலயத்தின் ஒற்றை கோபுரம், மீண்டும் நீரில் மூழ்கியது. மேட்டூர் அணை நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருவதால், காவிரி கரையில் பயிரிடப்பட்டிருந்த கம்பு, சோளம், எள் உள்ளிட்ட பயிர்கள் அறுவடை செய்ய முடியாமல் நீரில் மூழ்கி வருகின்றன.