தண்ணீர் தேடி கிராமங்களுக்குள் புகுந்த மான்கள், நாய்களிடம் கடிபட்டும், வேட்டைக்காரர்களிடம் சிக்கியும் உயிரிழந்து வந்தன. யானைகள் கிராமங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வந்தன. இந்நிலையில் கடந்த சில தினங்களாக தமிழக – கர்நாடக எல்லை வனப்பகுதியில் கனமழை பெய்து வருகிறது. இதனால் வறண்டு கிடந்த பாலாற்றில், திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. செந்நிறத்தில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. வெள்ளப்பெருக்கு ஏற்படும் முன்பாக பாலாற்றை கடந்து கால்நடை மேய்க்க சென்றவர்கள். மறுகரையில் இருந்து பாலாறு கிராமத்திற்கு வரமுடியாமல் போனது. வனப்பகுதியிலேயே தங்கிவிட்டனர்.
அதேபோல் கர்நாடக வனப்பகுதியில் இருந்து, தமிழக வனப்பகுதிக்கு வந்த மான்களும், யானைகளும் நீரின் வேகம் குறைந்த பிறகு, பாலாற்றில் இறங்கி கரை சேர்ந்தன. பாலாற்றில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக, பல மாதங்களுக்கு பிறகு, மீண்டும் பாலாற்றில் தண்ணீர் ஓடத்தொடங்கியது. இதனால் வனவிலங்குகளின் தண்ணீர் பிரச்னைக்கு தீர்வு ஏற்பட்டுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர். பாலாற்றில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக, மேட்டூர் அணைக்கு நீர் வரத்து சற்று அதிகரித்துள்ளது.