பெங்களூர் : கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலில் ஓ.பி.எஸ். தரப்பு மேலும் 2 தொகுதிகளில் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளது. அதிமுக தற்போது 2 அணிகளாக உடைந்தாலும், எடப்பாடி பழனிசாமி அணியிடம்தான் தற்போது அதிமுக உள்ளது. பெரும்பாலான நிர்வாகிகளும் அவரிடம்தான் உள்ளனர். இந்த நிலையில் பாஜவை எதிர்த்து கர்நாடகா தேர்தலில் அதிமுக தனித்துப் போட்டியிடுவதாக எடப்பாடி பழனிசாமி நேற்று அறிவித்தார். அம்மாநிலம் புலிகேசி (தனி) தொகுதியில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் அதிமுக வேட்பாளராக அன்பரசன் நிறுத்தப்பட்டுள்ளார். இவர் கர்நாடகா மாநிலம் அதிமுக எடப்பாடி அணியின் அவைத்தலைவராக உள்ளார்.
இதைத் தொடர்ந்து கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் புலிகேசி நகர் தொகுதியில் ஓ பன்னீர் செல்வம் தரப்பில் கர்நாடக மாநில மாணவர் அணிச் செயலாளரானன் நெடுஞ்செழியன் போட்டியிட உள்ளதாக இன்று காலை அறிவிப்பு வெளியானது. இந்த நிலையில், ஓ.பி.எஸ். தரப்பு மேலும் 2 தொகுதிகளில் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளது. இது தொடர்பாக ஓபிஎஸ் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “10-05-2023 அன்று நடைபெறவுள்ள கர்நாடக சட்டமன்றப் பேரவை பொதுத் தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் அதிகாரப்பூர்வ வேட்பாளர்களாக 146. கோலார் தங்க வயல் சட்டமன்றத் தொகுதியில் கர்நாடக மாநிலக் கழகத் தலைவரான திரு. A. அனந்தராஜ் அவர்களும் 164. காந்தி நகர் சட்டமன்றத் தொகுதியில் கர்நாடக மாநிலக் கழகச் செயலாளரான திரு. K. குமார் அவர்களும் நிறுத்தப்படுகிறார்கள் என தெரிவித்துக் கொள்கிறேன்,” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.