சென்னை: காரைக்குடி, திருவண்ணாமலை உள்ளிட்ட 4 நகராட்சிகள், மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படுவதாக சட்டப்பேரவையில் அமைச்சர். கே.என்.நேரு மசோதா தாக்கல் செய்தார். தமிழகத்தில் நகர்ப்புற பகுதிகளில் வாழும் லட்சக்கணக்கான மக்களுக்கு அடிப்படை உட்கட்டமைப்பு செய்து கொடுக்கவும், பெருநகரங்களுக்கு அருகில் அமைந்துள்ள பகுதிகளை இணைத்து, பெரு நகரங்களுக்கு இணையான தரமான சாலைகள், பாதுகாக்கப்பட்ட குடிநீர், மின்விளக்குகள், பாதாள சாக்கடை போன்ற அடிப்படை வசதிகளைச் செய்து கொடுக்க வேண்டும் என்ற அடிப்படையில், புதுக்கோட்டை, திருவண்ணாமலை, நாமக்கல், காரைக்குடி ஆகிய நகராட்சிகளை மாநகராட்சிகளாக தமிழ்நாடு அரசு தரம் உயர்த்தி தற்கான அரசாணையை பிறப்பித்திருந்தது. அதன்படி, பேரூராட்சிகள், ஊராட்சிகளை ஒன்றிணைத்து இந்த புதிய மாநகராட்சிகள் உருவாக்கப்பட்டன.
இது தொடர்பாக, இன்றைய தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு அதற்கான மசோதாவை தாக்கல் செய்தார். இதுகுறித்து அவர் தாக்கல் செய்த மசோதாவில் தெரிவித்திருப்பதாவது: தமிழ்நாடு நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தின் கீழ் மூன்று லட்சத்திற்கு குறைவான மக்கள் தொகை கொண்டுள்ள காரைக்குடி, திருவண்ணாமலை, புதுக்கோட்டை மற்றும் நாமக்கல் நகராட்சி மன்றங்களை உள்ளடக்கிய உள்ளாட்சி பகுதிகளின் வரலாற்று முக்கியத்துவம் மற்றும் ஆன்மீக சுற்றூலா பயணிகளை ஈர்த்தல் போன்றவற்றை கருத்தில் கொண்டு மார்ச் 15ம் தேதி 2024ம் ஆண்டு மாநகராட்சிகளாக உருவாக்கிட கருதப்பட்டுள்ளது. எனவே இந்த சட்ட முன்வடிவானதை செயல்வடிவம் கொடுக்க அரசை கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.