காரைக்குடி: காரைக்குடி பகுதியில் நேற்று மாலை சூறாவளி காற்றுடன் பலத்த இடி, மின்னலுடன் கனமழை கொட்டியதால், பல இடங்களில் மரங்கள் சாய்ந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சிவகங்கை மாவட்டம், காரைக்குடி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளான கோட்டையூர், அழகாபுரி, கழனிவாசல், கண்டனூர் பகுதிகளில் நேற்று மாலை திடீரென பலத்த இடி, மின்னலுடன் மழை கொட்டியது.
இடையிடையே பலத்த சூறாவளி காற்றும் வீசியது. சுமார் 3 மணி நேரம் பெய்த மழையால் சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மேலும், பல இடங்களில் மரங்கள் சாய்ந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பலத்த மழை பெய்து பூமி குளிர்ந்ததால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.