காரைக்கால் : காரைக்கால் மாவட்டத்தில் சம்பா சாகுபடி முடிந்ததும் கோடை காலத்தில் வயல்களில் எந்த சாகுபடி பணியையும் மேற்கொள்ளாமல் இருந்து வந்தனர். இதனிடையே குறுவை சாகுபடியை முன்னிட்டு காரைக்கால் மாவட்டத்தில் ஆழ்குழாய் நீர் பாசன வசதி மற்றும் சமீபத்தில் பெய்த கோடை மழை நீரை கொண்டு விவசாயிகள் பாசன நிலங்களில் தண்ணீர் விட்டு டிராக்டர் கொண்டு உழவு வேலையில் ஈடுபட்டு வருகின்றனர். ஒரு சில விவசாயிகள் பழமை மாறாமல் மாடுகளை கொண்டு உழவு பணியில் ஈடுபட்டுள்ளனர். மாவட்டத்தில் திருநள்ளாறு, சேத்தூர், திருப்பட்டினம் ,கோட்டுச்சேரி,செல்லூர்,நெடுங்காடு,போலகம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் குறுவை சாகுபடி நடைபெற்று வருகிறது.
கோட்டபாடி உள்ளிட்ட சில இடங்களில் நாற்றங்கால்களில் விடப்பட்டிருந்த நெல் நாற்றுகளை பறித்து நடவு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் விவசாயிகள் நாற்று பறித்தல், நடவு நடுவதற்கு வயல்களை சரி செய்தல் உள்ளிட்ட பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.மேலும் உழவில் சேறானது மேலெழும்பி வரும் போது சேற்றில் உள்ள பூச்சிகளை திண்ண அங்கு குழுமியிருந்த கொக்குகள் மற்றும் பறவைகள் இரை தேடும் காட்சிகள் காண்போரை பரவசப்படுத்தியது.
கூட்டுறவு வங்கிகளில் கடனை முன்கூட்டியே வழங்கினால் தான் குறுவை சாகுபடியை தொய்வின்றி செய்ய வசதியாக இருக்கும் விவசாயிகள் கூறுகின்றனர். மேலும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் கடன் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். 15 நாட்களில் உரம் எளிதாக தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.