ஒவ்வொரு வாரவிடுமுறை அன்றும் கடற்கரையில் சுற்றுலா பயணிகள் பொழுதை கழிக்க வருவார்கள். அந்த வகையில் இன்று வாரவிடுமுறை என்பதால் காலையிலேயே சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரி கடற்கரைக்கு படையெடுத்தனர். சூரிய உதயத்தை பார்த்து ரசித்த பிறகு, கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபத்துக்கு படகில் செல்வதற்காக பூம்புகார் கப்பல் போக்குவரத்துக்கழக அலுவலகத்தில் டிக்கெட் எடுப்பதற்காக நீண்ட வரிசையில் காத்து நின்றனர்.ஆனால் கடல் நீர்மட்டம் திடீரென தாழ்ந்துபோனதால் இன்று காலை 8 மணிக்கு தொடங்க இருந்த படகு சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது.
இதனால் ஏமாற்றமடைந்த சுற்றுலா பயணிகள் கடற்கரையின் பிற பகுதிகளை சுற்றிப்பார்க்க கிளம்பிவிட்டனர். சில மணி நேரத்தில் கடல் நீர்மட்டம் சீரான பிறகு படகு சேவை மீண்டும் தொடங்கியது. இதையடுத்து சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் படகில் ஏறிச்சென்று கடல்நடுவே உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்த்து ரசித்தனர். சுற்றுலா பயணிகள் கூட்டத்தால் இன்று கன்னியாகுமரி கடற்கரை களைகட்டியது.