கன்னியாகுமரி வட்டக்கோட்டை

இந்திய வரலாற்றில் மன்னர்களின் வாழ்விடங்களாக இருந்த கோட்டைகளைப்பற்றி ஆழமாக ஆராயும்போது, ​​பல பேரரசுகள் தங்கள் பாதுகாப்பை மனதில்கொண்டு கோட்டைகளை திட்டமிட்டுக் கட்டியிருப்பதைக் காணமுடிகிறது. பெரும்பாலும் இந்தக் கோட்டைகள் போர்களின்போது எதிரிகள் எளிதாக முன்னேற முடியாத, அந்நியர்கள் சுலபமாக ஊடுருவ முடியாத பாதுகாப்புகள் நிறைந்த பல சிறப்பம்சங்களுடன் கட்டப்பட்டன.

அந்த வகையில் தமிழ்நாட்டின் கன்னியாகுமரிக்கு அருகில் அமைந்துள்ள வட்டக்கோட்டையும் திருவிதாங்கூர் அரசின் கரை ஓரங்களைக் கண்காணிக்கவும் கடல்வழியாக அந்நியர்களின் படையெடுப்புகளில் இருந்து நாட்டை பாதுகாக்கும் நோக்கத்துடனும் படை வீடுகளுடன் 18ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. எதிரிகளை வீழ்த்துவதற்காக 3.5 ஏக்கர் நிலத்தில் 25 மீட்டர் உயரத்தில் இக்கோட்டை கட்டப்பட்டுள்ளது.

இந்தக் கோட்டையானது கன்னியாகுமரியில் இருந்து சுமார் 7 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இப்பொழுது பயணிகள் மிகவும் விரும்பும் சுற்றுலாத்தலமாகத் திகழ்கிறது. அமைதியான சூழ்நிலையில், ஒருபுறம் கடல் அலைகளின் காட்சியுடனும், மற்றொரு புறம் மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடர்களின் காட்சியுடனும் அமைந்துள்ளது. மேலும் கடற்கரை ஓரத்தில் காணப்படும் கறுப்பு நிறத்தில் அமைந்த மணல், இதன் மற்றுமொரு சிறப்பாகும்.

டச்சுக் கிழக்கிந்தியக் கம்பனியின் கடற்படை அலுவலராக இருந்து, 1741ஆம் ஆண்டில் இடம்பெற்ற குளச்சல் சண்டையில் வேணாட்டுப் படையுடன் மோதிய டச்சுத் தளபதியான இயுஸ்ட்டாச்சியஸ் டி லனோய் மேற்பார்வையில் செங்கற்கோட்டையாக இருந்த இந்தக் கோட்டை கற்கோட்டையாக மாற்றிக் கட்டப்பட்டது. காலப்போக்கில் அவர் வேணாடு அரசரின் நம்பிக்கைக்கு உரியவராகி வேணாடு மன்னர் பால மார்த்தாண்டன் முதலாம் திருவடி அவர்களால் படைத்தளபதியாக நியமிக்கப்பட்டார்.

1809ஆம் ஆண்டு ஆங்கிலேயர்கள் வேணாட்டு அரசைத் தோற்கடித்தபோது இந்தக் கோட்டையை அழிக்காமல் விட்டுவிட்டனர். உள் கொத்தளங்களுக்குள் பீரங்கிகள் கொண்டுசெல்ல வசதியாக சாய்தளம் அமைக்கப்பட்டுள்ளது. நுழைவு வாயிலில் வேணாட்டு அரசின் சின்னமான யானைச் சிலைகள் வரவேற்கின்றன. கோட்டைக்குள் கண்காணிப்பு அறை, ஓய்வுஅறை, ஆயுதசாலை ஆகியவையும் உள்ளன.

மண்டபத்தில் மீன் சின்னம் பொறிக்கப்பட்டுள்ளதால் கி.பி 12ஆம் நூற்றாண்டில் இந்தக் கோட்டை பாண்டியர்களின் கைவசமிருந்திருக்கலாம் என்று கருதப்படுகின்றது. தற்போது இந்த கோட்டையின் பராமரிப்பு இந்திய தொல்லியல் ஆராய்ச்சித் துறையின் கீழ்கொண்டு வரப்பட்டுள்ளது. தொல்லியல் துறை இந்தக் கோட்டையின் புனரமைப்புப் பணிகளை மேற்கொண்டது.

Related posts

தினம் தினம் தாக்குதல் நடத்தும்; ஹமாஸ், ஹிஸ்புல்லா குழுக்களை ஒழிக்கும் வரை போர் தொடரும்: ஐநா பொதுச்சபையில் இஸ்ரேல் பிரதமர் பரபரப்பு பேச்சு

முக்கிய சந்திப்பு

கல்வி, மெட்ரோ ரயில் திட்டத்துக்கு நிதி ஒதுக்க கோரிக்கை பிரதமரிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் மனு: மீனவர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணவும் வலியுறுத்தல்