தூத்துக்குடி: தூத்துக்குடியில் கனிமொழியின் காரில் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை செய்தனர். தூத்துக்குடி மக்களவை தொகுதி வேட்பாளரும், திமுக துணைப் பொதுச்செயலாளருமான கனிமொழி எம்பி, நேற்று மாலை தூத்துக்குடியில் இருந்து நெல்லை மாவட்டத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்வதற்காக காரில் புறப்பட்டு சென்றார். அப்போது தூத்துக்குடி 3வது மைல் அருகே புள்ளியியல் துறை உதவி இயக்குநர் ஸ்மிருதி ரஞ்சன் பிரதான் தலைமையிலான பறக்கும் படை அதிகாரிகள் கனிமொழி வாகனத்தை நிறுத்தி காரில் சோதனை செய்தனர். இந்த சோதனையை முழுமையாக வீடியோ பதிவு செய்தனர். கனிமொழி எம்பி, பறக்கும் படையினரின் சோதனைக்கு முழு ஒத்துழைப்பு அளித்தார். வாகனத்தில் எதுவும் இல்லாததால் அதிகாரிகள் அனுப்பி வைத்தனர். அதனைத் தொடர்ந்து கனிமொழி நெல்லைக்கு புறப்பட்டுச் சென்றார்.