காஞ்சிபுரத்தில் நாளை திமுக பவள விழா பொதுக்கூட்டம் காஞ்சிபுரம் வடக்கு – தெற்கு மாவட்ட திமுகவினர் அணி அணியாக திரண்டு வாருங்கள்: அமைச்சர் தா.மோ.அன்பரசன், க.சுந்தர் எம்எல்ஏ வேண்டுகோள்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் நாளை நடைபெறும் திமுக பவள விழா பொதுக்கூட்டத்திற்கு காஞ்சிபுரம் வடக்கு – தெற்கு மாவட்டத்தில் இருந்து திமுகவினர் அணி அணியாக திரண்டு வாருங்கள் என அமைச்சர் தா.மோ.அன்பரசன், எம்எல்ஏ க.சுந்தர் ஆகியோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட செயலாளரும், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சருமான தா.மோ.அன்பரசன், காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளரும், உத்திரமேரூர் எம்எல்ஏவுமான க.சுந்தர் ஆகியோர் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: காஞ்சி தலைவன் அண்ணாவால், 1949ம் ஆண்டு உருவாக்கப்பட்ட, ‘திராவிட முன்னேற்ற கழகம்’ என்ற பேரியக்கம், அண்ணாவின் கொள்கை தம்பிகளால் வளர்க்கப்பட்டு, அவரது தம்பிகளில் தலையாய தம்பியான கலைஞரால் 50 ஆண்டுகளுக்கு மேல் கட்டிக் காக்கப்பட்டு, நம்முடைய உயிரினும் மேலான திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் தலைமையில் வெற்றிகரமாக இயங்கி கொண்டிருக்கிற வேளையில், இன்றைக்கு திமுக பவள விழா ஆண்டை நிறைவு செய்கிறது.

75 ஆண்டுகளை கடந்து பவள விழாவை நிறைவு செய்துள்ள திமுக என்ற பேரியக்கம் வெற்றி – தோல்விகளை கடந்து, தனது லட்சியப்பாதையில் உறுதி குலையாமல் பயணித்து வரும் திமுகவுக்கு எத்தனை நெருக்கடிகள் வந்தாலும், அதனை எதிர்கொண்டு, முதுகு வலையாமல், தரையில் தவழாமல், நெஞ்சை நிமிர்த்தி நின்று, “நான் திமுககாரன், நான் கலைஞரின் உடன்பிறப்பு, தளபதியின் அன்பு தொண்டன்” என்று கம்பீரமாக சொல்கின்ற துணிவும், வலிமையும் திமுக தொண்டர்களின் அடையாளம். அந்த கம்பீரத்துடன், அண்ணா கண்ட திராவிட முன்னேற்ற கழகம், தனது 75வது ஆண்டினை பவள விழாவாக, திமுக முப்பெரும் விழாவுடன் சேர்ந்து கடந்த 17ம்தேதி சென்னை நந்தனத்தில் திமுக குடும்ப விழாவாக கொண்டாடி மகிழ்ந்தோம். வெற்றிமேல் வெற்றிகளை குவித்து வரும் அன்புத்தலைவர் மு.க.ஸ்டாலின், நம் உயிரான கழகத்துடன் இணைந்து கொள்கை கூட்டணி அமைத்துள்ள இயக்கத்தினரையும் இணைத்து பெருந்தகை பிறந்த காஞ்சி மண்ணில் திமுக பவள விழாவை கொண்டாடிட வேண்டும் என்று பெரு மகிழ்ச்சியுடன் அறிவித்தார்.

நம்முடைய உயிரினையை தலைவரின் அன்பு கட்டளைக் ஏற்று, காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுகவும், தெற்கு மாவட்ட திமுகவும் இணைந்து அண்ணா பிறந்த புனித பூமியில் அண்ணா பயின்ற பச்சையப்பன் ஆடவர் கல்லூரியில் அமைந்துள்ள விளையாட்டு திடலில் நாளை (28ம்தேதி சனிக்கிழமை) மாலை 5 மணியளவில் திமுக கொள்கை கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்று வாழ்த்துரை வழங்க உள்ள மாபெரும் திமுக பவள விழா பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது.அண்ணா பிறந்த காஞ்சிபுரம் மாநகரில் திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்று வாழ்த்துரை வழங்கும் திமுக பவளவிழா பொதுக்கூட்டத்தை, காஞ்சிபுரம் வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட திமுகவினர் இணைந்து, பார்ப்போர் அனைவரும் வியக்கும் வகையில் மிகவும் பிரம்மாண்டமான மேடை அமைத்து எழுச்சியுடன் மாநாடு போல நடத்த ஏற்பாடுகள் செய்து உள்ளோம்.

மிகவும் கோலாகலமாக நடைபெறவுள்ள திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் அனைவரும் பங்கேற்கும் திமுக பவள விழா மாபெரும் பொதுக்கூட்டத்தில் காஞ்சிபுரம் வடக்கு – தெற்கு மாவட்டத்தில் இருந்து மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வார்டு கிளை கழக செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், திமுக அணிகளின் மாவட்ட, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் நிர்வாகிகள், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் உள்ளிட்ட ஒட்டுமொத்த திமுகவினர் பல்லாயிரக்கணக்கில் அலைகடலென அணிதிரண்டு வந்து பங்கேற்றிட வேண்டும் என்று இருகரம் கூப்பி அன்புடன் அழைக்கிறோம்.

இக்கொள்கை கூட்டணி கட்சிகளுடன் இணைந்து, 40க்கு 40 என்று நாடாளுமன்ற தேர்தலில் மகத்தான வெற்றி பெற்றதுபோல, வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் 200+ தொகுதிகளில் வெற்றியினை உறுதி செய்திடும் வகையில் நாளை அண்ணன் பிறந்த காஞ்சியில் நடைபெறும் திமுக பவள விழாவில் காஞ்சிபுரம் வடக்கு – தெற்கு மாவட்ட திமுகவினர் காஞ்சி மாநகரமே குலுங்கிடும் வகையில், கொள்கை தீரர்களாக திமுக கொடி ஏந்தி ஆயிரக்கணக்கில் பெரும் படையாக திரண்டு வந்து, எதிர்வரும் சட்டமன்ற தேர்தல் வெற்றிக்கு அச்சாரமாக திகழும் வகையில், இந்த பவள விழாவை வெற்றியடைய செய்ய வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

நம்முடைய நெஞ்சம் நிறைந்த அன்பு தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலின், கொள்கை கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்று சிறப்பிக்கும் வகையில் ஏற்பாடு செய்துள்ள இம்மாபெரும் பொதுக்கூட்டத்தில் கலந்துக்கொள்ளவது, “நமது உரிமை”, “நமது கடமை” என்ற உணர்வோடு, காஞ்சிபுரம் வடக்கு – தெற்கு மாவட்டம் முழுவதிலும் இருந்து திமுக தோழர்கள் அனைவரும், நாளை (28ம் தேதி சனிக்கிழமை) மாலை 4 மணிக்கெல்லாம் காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவர் கல்லூரி திடலுக்கு அணி அணியாக திரண்டு வந்து பங்கேற்று சிறப்பிக்கும் படி இருகரம் கூப்பி அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். “இப்படை தோற்கின் எப்படை வெல்லும்” என்ற அண்ணாவின் வைர வரிகளுக்கு ஒப்பாக அண்ணன் பிறந்த காஞ்சி மாநகரில் இதுவரை, இதுபோன்ற பிரம்மாண்டமான பொதுக்கூட்டம் நடைபெற்றது இல்லை என்று தமிழக அரசியல் வரலாற்றில் புதியதோர் சரித்திர சாதனையை படைத்திடும் வாரீர் வாரீர் என்று அகமகிழ்ந்து அன்புடன் அழைக்கிறோம். இவ்வாறு அவர்கள் அறிக்கையில் கூறியுள்ளனர்.

Related posts

திருச்சி மாவட்டத்திற்கு சட்டசபையில் அறிவிக்கப்பட்ட மருத்துவக்கல்லூரி அரங்கம் மட்டுமே தரம் குறைவு

குழந்தைகளுடன் இளம்பெண் மாயம்

திருவெறும்பூர் அருகே தனியார் கம்பெனியில் இரும்பு திருடியவர் கைது