காஞ்சிபுரத்தில் வரும் 28ம் தேதி திமுக பவளவிழா பொதுக்கூட்டம்: கூட்டணி கட்சி தலைவர்களுக்கு அழைப்பு!!

சென்னை: காஞ்சிபுரத்தில் வரும் 28ம் தேதி திமுக பவளவிழா பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்க அனைத்துக்கூட்டணி கட்சி தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக மூத்த நிர்வாகிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை திடீர் ஆலோசனை நடத்தினார்.

அப்போது, வருகிற 28ம் தேதி கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கும் திமுக பவள விழா பொதுக்கூட்டம் குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. பெரியார், அண்ணா பிறந்தநாள் மற்றும் திமுக தொடங்கிய நாள் என முப்பெரும் விழா சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நேற்று நடந்தது. இதைத்தொடர்ந்து திமுக பவளவிழா பொதுக்கூட்டம் வரும் 28ம் தேதி மாலை 5 மணிக்கு காஞ்சிபுரம் மாவட்டம் பச்சையப்பன் ஆடவர் கல்லூரி திடலில் நடைபெற உள்ளது.

காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்.எல்.ஏ வரவேற்று பேசுகிறார். காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட செயலாளரும் அமைச்சருமான தா.மோ.அன்பரசன் முன்னிலை வகிக்கிறார். திமுக பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் தலைமை தாங்குகிறார். இதில் திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றுகிறார். மேலும், திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் அனைவரும் பங்கேற்கும் வகையில் காஞ்சியில் பவள விழா பொதுக்கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ள கூட்டத்தில் பங்கேற்க கூட்டணியில் உள்ள கி.வீரமணி (திராவிட கழகம்), செல்வபெருந்தகை (காங்கிரஸ்), வைகோ (மதிமுக), கே.பாலகிருஷ்ணன் (மார்க்சிய கம்யூ.), இரா.முத்தரசன் (இந்திய கம்யூ.), கே.எம்.காதர்மொய்தீன் (இந்திய யூனியன் முஸ்லீம் லீக்), தொல்.திருமாவளவன் (விசிக), கமல்ஹாசன் (மநீம), எம்.எச்.ஜவாஹிருல்லா (மமக), ஈ.ஆர்.ஈஸ்வரன் (கொமதேக), வேல்முருகன் (தவாக) மற்றும் ஜி.எம்.ஸ்ரீதர் வாண்டையார் பொன்குமார், எர்ணாவூர் நாராயணன், முருகவேல்ராஜன், தமீமுன் அன்சாரி, கருணாஸ், அதியமான், திருப்பூர் அல்தாப், பி.என்.அம்மாவாசி உள்ளிட்ட அனைத்து கூட்டணி கட்சி தலைவர்களும் பங்கேற்கிறார்கள்.

Related posts

ஒய்.எஸ்.ஆர். காங்கிரசை சேர்ந்த மாஜி அமைச்சர் பவன் கட்சியில் ஐக்கியம்

வடலூர் வள்ளலார் பெருவெளி சைட் ‘பி’யில் மருத்துவமனை கட்ட ஐகோர்ட் அனுமதி!!

எண்ணூர் கடற்கரையில் நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருந்த கல்லூரி மாணவர் ராட்சத அலையில் சிக்கி உயிரிழப்பு..!!