காஞ்சிபுரம்: ஆலந்தூர் கத்திப்பாரா மாவட்ட அலுவலகத்தில் நடந்த காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட ஆலோசனை கூட்டத்தில் வரும் 28ம்தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கும் திமுக பவள விழா பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது. கூட்டத்திற்கு 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட திமுகவினர் அணி திரண்டு வார வேண்டும் என அமைச்சர் தா.மோ.அன்பரசன் அழைப்பு விடுத்தார்.
காஞ்சிபுரம் திமுக வடக்கு மாவட்டம் சார்பில், அனைத்து அணிகளின் மாவட்ட அமைப்பாளர்கள், மாவட்ட துணை அமைப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் மற்றும் ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் திமுக இளைஞர் அணி, மாணவர் அணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் கலந்தாலோசனை கூட்டம் நேற்று ஆலந்தூர் கத்திப்பாரா மேம்பாலம், ஜோதி திரையரங்கம் அருகில் அமைந்துள்ள மாவட்ட அலுவலகத்தில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமையில் நடந்தது.
மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் கோல்டு டி.பிரகாஷ், மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் எல்.பிரபு ஆகியோர் வரவேற்றனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: திமுக பவள விழாவையொட்டி திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்று சிறப்பிக்கும் மாபெரும் பொதுக்கூட்டம் வரும் 28ம்தேதி (சனிக்கிழமை) மாலை 5 மணியளவில் அண்ணா பிறந்த காஞ்சிபுரத்தில் உள்ள பச்சையப்பன் ஆடவர் கல்லூரி விளையாட்டு திடலில் நடைபெறுகிறது.
தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று, சிறப்புரையாற்ற உள்ள மாபெரும் பொதுக்கூட்டத்தில் திமுக கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் அனைவரும் பங்கேற்று வாழ்த்துரை வழங்குகின்றனர். அண்ணா பிறந்த காஞ்சிபுரம் மாநகரில் திமுக கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்று சிறப்பிக்கும் திமுக பவள விழா பொதுக்கூட்டத்தை காஞ்சிபுரம் வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட திமுக இணைந்து, பார்ப்போர் அனைவரும் வியக்கும் வகையில் மிகவும் பிரம்மாண்ட மேடை அமைத்து எழுச்சியுடன் மாநாடு போல நடத்தப்பட உள்ளது.
காஞ்சிபுரத்தில் மிகவும் கோலகலமாக நடைபெறவுள்ள திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் அனைவரும் பங்கேற்கும் திமுக பவள விழா மாபெரும் பொதுக்கூட்டத்தில் காஞ்சிபுரம் வடக்கு மாவட்டத்தில் இருந்து மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வார்டு கிளை செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், அணிகளின் அமைப்பாளர்கள், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் உள்ளிட்ட ஒட்டுமொத்த திமுகவினரும் பல்லாயிரக்கணக்கில் அணிதிரண்டு வந்து பங்கேற்க வேண்டும் என்று அமைச்சர் தா.மோ.அன்பரசன் கேட்டுக்கொண்டார்.
இக்கூட்டத்தில் மாவட்ட பொருளாளர் வெ.விசுவநாதன், மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் என்.கனகராஜ், பகுதி செயலாளர்கள் பி.குணாளன், என்.சந்திரன், த.ஜெயக்குமார், நகர செயலாளர்கள் டி.பாபு, எம்.கே.டி.கார்த்திக், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் உதயா கருணாகரன், மாவட்ட மகளிர் தொண்டரணி அமைப்பாளர் ச.சசிகலா, மாவட்ட வர்த்தகர் அணி அமைப்பாளர் ஜெயராம் மார்த்தாண்டன், மாவட்ட சிறுபான்மையினர் அணி அமைப்பாளர் எஸ்.ஆல்பர்ட்,
மாவட்ட ஆதிதிராவிட நலக்குழு அணி அமைப்பாளர் பாஸ்கரன், மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் எஸ்.கர்ணன், மாவட்ட மீனவர் அணி அமைப்பாளர் ஆர்.கோவிந்தன், மாவட்ட தொண்டர் அணி அமைப்பாளர் ஜான் தினகரன், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் தையூர் வி.விஜயகுமார், ப.இராமமூர்த்தி, டி.கே.கமலக்கண்ணன், கே.மணிகண்டன், கோ.ஜானகிராமன், மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர்கள் ஆலந்தூர் கலாநிதி குணாளன், தாம்பரம் விக்கி (எ) விக்னேஸ்வரன், வே.சங்கீதா, எஸ்.ஜெகதீப் மற்றும் வண்டலூர் தே.ஜெகன் உள்ளிட்ட அணிகளின் மாவட்ட அமைப்பாளர்கள் கலந்துகொண்டனர்.