ஊட்டி: நீலகிரி மாவட்டம் கொடநாட்டில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா மற்றும் சசிகலாவுக்கு சொந்தமான தேயிலை எஸ்டேட் மற்றும் பங்களா உள்ளது. இங்கு கடந்த 2017ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 23ம் தேதி நள்ளிரவு புகுந்த 11 பேர் கொண்ட கும்பல் காவலாளி ஓம்பகதூரை கொலை செய்து, ஆவணங்களை கொள்ளை அடித்து சென்றது. இதைத்தொடர்ந்து கொள்ளை கும்பலுக்கு தலைமை வகித்த சேலம் ஆத்தூர் பகுதியை சேர்ந்த கனகராஜ் சாலை விபத்தில் உயிரிழந்தார். இந்த வழக்கு 5 ஆண்டுகளாக ஊட்டியில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில், இந்த வழக்கு நேற்று ஊட்டியில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசு தரப்பில் ஆஜரான வக்கீல் ஷாஜகான், கொலை நடந்த ஓரிரு நாட்களில் கனகராஜ் செல்போனிற்கு 7 எண்ணில் துவங்கும் வெளிநாட்டு செல்போனில் இருந்து ஐந்து முறை அழைப்பு வந்துள்ளது. யார் அவரை அழைத்தார்கள், எதற்காக அவரை அழைத்தார்கள் என்பதை குறித்து இன்டர்போல் போலீசாரை கொண்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வழக்கு விசாரணை நடந்து கொண்டிருக்கும்போது கொலை நடந்த இடத்தில் சென்று ஆய்வு மேற்கொள்வது சரியாக இருக்காது’ என்றார். இதை கேட்டுக் கொண்ட நீதிபதி வழக்கு விசாரணையை அடுத்த மாதம் 26ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.