கனகராஜ் ஜெயலலிதாவின் டிரைவர் தான் கொடநாடு வழக்கில் எடப்பாடியை விசாரிக்க வேண்டும்: ஓபிஎஸ் அணி வலியுறுத்தல்

சேலம்: கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் எடப்பாடியையும் விசாரிக்க வேண்டும்’ என்று ஓபிஎஸ் அணியினர் வலியுறுத்தி உள்ளனர். அதிமுக ஓபிஎஸ் அணியின் கொள்கை பரப்பு செயலாளர் பெங்களூரு புகழேந்தி, சேலத்தில் நேற்று அளித்த பேட்டி: கொடநாடு கொலை, கொள்ளை வழக்கை திசை திருப்பவே, கனகராஜ் ெஜயலலிதாவின் டிரைவர் இல்லை என்று எடப்பாடி பழனிசாமி சொல்கிறார். ஆனால், எடப்பாடி முதல்வராக இருந்த போது, அவரது நேரடி கட்டுப்பாட்டில் இருந்த போலீஸ், கனகராஜ் ஜெயலலிதாவின் கார் டிரைவர் என்று தான் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

ஊட்டி நீதிமன்றமும் இறந்த கனகராஜ் ஜெயலலிதாவின் டிரைவர் என்று தெளிவாக குறிப்பிட்டுள்ளது. அதற்கான ஆதாரத்தை காண்பிக்கிறேன். கனகராஜை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, வெளியே அனுப்பி விட்டார். பின்னர் வேறு பல அதிமுக தலைவர்களிடமும் கனகராஜூக்கு நெருங்கிய பழக்கம் இருந்துள்ளது. கொடநாடு வழக்கு குறித்து, கனகராஜின் குடும்பத்தினர் யாரும் புகார் தெரிவிக்கவில்லை என்று எடப்பாடி கூறுகிறார். ஆனால், கனகராஜின் அண்ணன் தனபால், கொடநாட்டில் இருந்து பல ஆவணங்களை எடுத்துக் கொண்டு வந்து விட்டனர் என பலமுறை புகார் தெரிவித்துள்ளார். அதனை அப்போதைய அரசு கண்டுகொள்ளவில்லை. எடப்பாடி உள்பட 12 பேரிடம் விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

சசிகலா உள்பட பலரிடம் விசாரணை நடத்திய நிலையில், எடப்பாடியிடமும் விசாரணை நடத்த வேண்டும். எடப்பாடியுடன் சேர்ந்ததால் தான் ஓ.பன்னீர் செல்வத்தின் அரசியல் வாழ்க்கை போனது. இது பாஜ செய்த கூத்து. தனியாக கட்சி ஆரம்பிக்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. தேர்தல் ஆணையம் எடப்பாடியை அதிமுக பொதுச்செயலாளர் என்று இதுவரை தெரிவிக்கவில்லை.

பொதுக்குழு தொடர்பான வழக்கு, இன்னும் முடியவில்லை. எங்கள் அணியின் நாடாளுமன்ற தேர்தல் பிரசாரம், அடுத்த மாதம் காஞ்சிபுரத்தில் தொடங்கும். அங்கு ஓபிஎஸ் பேசுகிறார். கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில், எடப்பாடி நிச்சயம் சிறைக்கு செல்வார். அதிமுக எங்களிடம் வரும். இவ்வாறு பெங்களூரூ புகழேந்தி கூறினார்.

*புளியோதரை போலவே அதிமுக மாநாடு
சென்னை செல்வதற்காக நேற்று மதுரை விமான நிலையம் வந்த ஓ.பன்னீர்செல்வத்திடம் அதிமுக மாநில மாநாடு குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, ‘‘புளியோதரை எப்படி இருந்தது? நீங்கள் சாப்பிட்டீர்களா’’ என செய்தியாளர்களிடம் கேள்வி எழுப்பினார். அவர்கள், ‘‘சாப்பிடவில்லை’’ என்றனர். பின்னர், ‘‘அவர்கள் கொடுத்த புளியோதரை எப்படி இருந்ததோ, அதுபோலத்தான் அவர்களின் மாநில மாநாடும் இருந்தது’’ என்று கிண்டலாக கூறி விட்டு சென்றார்.

Related posts

அரசின் தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் தாயார் மறைவு: முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

சொல்லிட்டாங்க…

சொந்த மாவட்டத்திலேயே தலைமறைவு வாழ்க்கை வாழும் மாஜி மந்திரியை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா