கமுதி: கமுதி அருகே அரசுப்பள்ளி ஆசிரியர் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். ராமநாதபுரம் மாவட்டம், கமுதி செட்டியார் தெருவை சேர்ந்தவர் கண்ணன். இவர் அருகேயுள்ள கே.பாப்பாங்குளம் கிராம ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு சங்கீதா என்ற மனைவியும், ஒரு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். கோடை விடுமுறை முடிந்து பள்ளி நேற்று துவங்கப்பட்டது. இதையடுத்து, டூவீலரில் கே.பாப்பாங்குளம் பள்ளிக்கு கண்ணன் நேற்று காலை சென்று கொண்டிருந்தார். பாப்பாங்குளம் விலக்கு சாலையில் சென்ற போது, மர்ம நபர்கள் திடீரென அவரை வழி மறித்து அரிவாளால் சரமாரியாக வெட்டினர்.
இதில் சம்பவ இடத்திலேயே கண்ணன் உயிரிழந்தார். தகவல் அறிந்த கமுதி போலீசார் சென்று விசாரணை நடத்தினர். கண்ணனின் உடலை மீட்டு கமுதி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில், கண்ணன் ஆசிரியர் பணியுடன் ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வந்துள்ளார். இதில் தொழில் போட்டி மற்றும் கொடுக்கல், வாங்கல் தொடர்பாக கொலை நடந்திருக்கலாம் என்று தெரியவந்துள்ளது. இதுகுறித்து கமுதி போலீசார் வழக்குப்பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.